Showing posts with label castless tamil Nationalism. Show all posts
Showing posts with label castless tamil Nationalism. Show all posts

Thursday, 9 May 2019

Castless Tamil Nationalism


தலித் மக்களுக்கு எதிரான காவி அரசியல்

பா.ச.க.வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 6

’அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நல்லாட்சி’ என்று 2014 தேர்தலின் போதும் அதற்குப் பின்பும் பா.ச.க. முழங்கியது. கல்வி, தொழில்முனைதல், திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் தலித் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் எனப் பா.ச.க. உறுதியளித்தது. ஆனால், ஐந்தாண்டு ஆட்சியோ தலைகீழான காட்சியாக இருக்கிறது.
தலித் மக்களிடையே நான்கு பேருக்கு ஒருவரின் வாக்குகளை 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றிருந்த பா.ச.க.,  தலித் மக்களிடம் மேலும் தனது செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்று விரும்பியது. அம்பேத்கரைத் தனதாக்குவதற்காகப் பெரிதும் முயன்றது. 2015 ஆம் ஆண்டில் மத்திய அரசு, 1920 ஆம் ஆண்டு இலண்டனில் படித்த போது அம்பேத்கர் தங்கியிருந்த வீட்டை வாங்கி, அதை அருங்காட்சியமாக மாற்றியது. அம்பேத்கரின் 125 வத பிறந்த ஆண்டு கொண்டாட்டத்தைக் கையில் எடுத்தது ஆர்.எஸ்.எஸ். அம்பேத்கரைப் பற்றிய தொடர் கட்டுரைகளை தனது ‘ஆர்கனைசர்’ ஏட்டில் எழுதி அவரை இந்துத்துவ சார்பாளராக காட்ட முயன்றது. ஆண்டுதோறும் அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாடுவதற்கான ஒரு திட்டத்தை வெளியிட்டது. ரொக்கமில்லாப் பரிமாற்றத்துக்காக இந்திய தேசியப் பணக் கொடுப்புக் குழுமத்தால் உருவாக்கப்பட்டு அம்பேத்கர் பெயரிடப்பட்ட அலைப்பேசிச் செயலி பாரத் பணப் பரிமுகம் (Bharath Interface for Money – BHIM) தொடங்கப்பெற்றது. இந்தச் செயலியை 2016 திசம்பரில் பிரதமர் தொடங்கி வைத்தார். ஆனால், அம்பேத்கரை உயர்த்திப் பிடிப்பது போல் தோற்றம் செய்தாலும் தலித் மக்களைக் கைவிட்டதுதான் நடைமுறை உண்மையாக இருக்கிறது.
அரசமைப்புச் சட்டம் தீண்டாமையை குற்றச் செயலாக்கியுள்ளது, பாதுகாப்பு, கண்ணியத்துடனான வாழ்வுரிமை, சமூக நீதி ஆகியவற்றை அரசமைப்புச் சட்ட உறுப்புகள் அடிப்படை உரிமைகளாகக் கொண்டுள்ளன. ஆனால், கொலை, பாலியல் வல்லுறுவு, வன்தாக்கு, வைதல், அம்மணமாக்கி ஊர்வலம் போகச் செய்தல் என தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளின் பட்டியல் மிக நீளமானது. தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை என்பதைவிட கடந்த பத்தாண்டுகளின் புள்ளிவிளக்கங்களைப் பார்க்கும்போது பா.ச.க. ஆட்சியில் அவை அதிகரித்திருக்கின்றன. தேசியக் குற்றப் பதிவுருக் கழகத்தின் தரவுகள் கீழே
 2008-092009-102010-112011-122012-132013-142014-152015-162016-17
எஸ்.சி.336153359432712337163940847064450034500140801
எஸ்.டி.55825425588557565922679311451109146568

2014 இல் மோடி ஆட்சிக்கு வந்த பின் பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கும் பட்டியலிடப்பட்ட பழங்குடிக்களுக்கும் எதிரான வன்முறை பெருகியிருப்பதை மேற்படி அட்டவணை எடுத்தியம்புகிறது. 2014 ஆம் ஆண்டு கணக்கின்படி உத்தர பிரதேசம், இராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலித் மக்கள் மீதான வன்முறைகள் அதிகமாக நடந்தன என்று புள்ளி விளக்கங்கள் சொல்கின்றன. தலித் பெண்களுக்கு எதிரான வன்முறை அச்சமூட்டுகின்றன. தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளில் முதல் இரண்டு இடத்தைப் பிடிப்பவை – 1. பாலியல், உடலியல் தாக்குதல், பாலியல் தொல்லை, பின்தொடர்தல், துயிலுரித்தல், பார்வை மோகம் உள்ளிட்ட  பெண்களை அடக்கியாளும் நோக்கத்திலான தாக்குதல் 2. பாலியல் வல்லுறவு. தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளில் இத்தகையவை 14% ஆகும். தலித் மக்களுக்கு எதிரானப் பெரும்பாலான குற்றங்கள் தலித் பெண்களுக்கு எதிரானவை. 2016 இல் மட்டும் தலித் பெண்களுக்கு எதிரானப் பாலியல் வல்லுறவுகள் 2541, பெண்களை இழிவுபடுத்தும் நோக்கிலான குற்றங்கள் 3372 எனப் பதிவாகியுள்ளது. எப்போதும் இத்தகைய சாதியக் குற்றங்கள் பதிவானதைவிட பதிவாகாமல் போனவையே ஏராளமாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. தேசியம் என்பதன் பெயரால் பா.ச.க. அரசு ஊக்குவிக்கும் இந்துத்துவ மேலாதிக்கம் என்பது விளிம்புநிலை மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழிவகுக்கிறது. மாட்டிறைச்சி உண்ணத் தடை, பசுவதை தடைச் சட்டங்கள், சாதிக்கலப்புத் திருமணங்களுக்கு எதிர்ப்பு ஆகியவற்றால் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளும் கொலைகளும் பெருகியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் 2018 நவமபரில் ஓசூரைச் சேர்ந்த காதல் இணையர்கள் நந்தீஸ்-சுவாதி கொல்லப்பட்டத்தற்குப் பின்னால் ’அனுமன் சேனா’ போன்ற சங் பரிவார அமைப்புகளின் கை இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆனால், அட்டவணை சாதியினர் மற்றும் அட்டவணைப் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதும் பாதுகாப்பை உறுதிசெய்வதும் எங்கள் தலையாய கடமை என்று பா.ச.க. 2014 தேர்தலில் வாக்குறுதி தந்திருந்தது.
தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளை ஒட்டிப் பதிவாகியுள்ள வழக்குகளைப் பொருத்தவரை அவை சொற்பமாகவே சாதிய வன்முறையாக கணக்கில் எடுக்கப்படுகின்றன. நாடே அறிந்த கயர்லாஞ்ச் படுகொலை வழக்கில் அதை சாதியக் கொலையாக கருத்தில் கொள்ளாமல் ’பழிவாங்குவதற்காக செய்யப்பட்ட கொலை’ என்று முடிவுசெய்து நீதிகோரி போராடும் தலித் மக்களை நக்சல்கள் என்றும் தேச விரோதிகள் என்றும் முத்திரையிடுகிறது பா.ச.க. தலைமையிலான மராட்டிய அரசு.
சனவரி 2018 இல் பீமா கோரேகோனில் நடந்த தலித் மக்களின் எழுச்சிமிக்கப் பேரணிக்கு எதிராக வெடித்த வன்முறை என்பது உயர் சாதியடித்தளம் கொண்ட இந்துத்துவ ஆற்றல்களால் நடத்தப்பட்டவை. அரசு குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது; பாதிக்கப்பட்டவர்களைக் குறிப்பாக ’எல்கர் பரிஷத்’ அமைப்பை நக்சல் இயக்கமென்று முத்திரையிட்டு மாந்த உரிமை செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகளைக் கைது செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாடறிந்த அறிவுஜீவியும் மாந்த உரிமை செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே வரை இவ்வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர். தலித் மக்களின் எழுச்சி காவி அரசியலுக்கு எரிச்சலூட்டுகிறது என்பதற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு.
உயர்கல்வி நிறுவனங்களிலும் தலித் மாணவர்களுக்கு எதிரான சாதியப் பாகுபாடுகளும் கட்டமைப்பு வகையிலான வன்முறைகளும் குறைந்தபாடில்லை. நடுவண் பல்கலைக் கழகங்கள், உயர் தொழில்நுட்ப கல்வி நிலையங்கள், நடுவண் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் என நாட்டின் உயர்கல்வி நிலையங்களில் நுழைவதற்கும் அங்கு கல்வி கற்பதற்கும் ஏற்ற சூழல் இல்லை என்பதோடு அங்கே இடம்பெறும் சாதியப் பாகுபாடுகள் அதிகம் வெளிவராமலே போய்விடுகின்றன.  தலித் மாணவர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை சமூகப் பிரிவினர் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். 2016 ஆம் ஆண்டில் ஐதராபாத் நடுவண் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை செய்வதற்கு முன்னால் எழுதிய கடைசி கடிதம் நாட்டின் உண்மை நிலையைப் படம்பிடித்துக் காட்டியது. பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத், துணை வேந்தர் அப்பாராவ், நடுவண் அமைச்சர் பண்டாரு தாத்ரேயா, மாந்த வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியோர் அவரது மரணத்திற்குப் பின்னால் இருப்பது அம்பலமானது. ஓர் ஆராய்ச்சி மாணவர் பல்கலைக் கழகத்திற்குள்ளே தற்கொலை செய்து கொள்ள நேரிட்டதற்காக வெட்கப்பட்டிருக்க வேண்டும் அரசு. மாறாக, அவர் தலித்தா? தலித் இல்லையா? என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கி, நடுவண் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி ’ரோஹித் தலித் இல்லை’ என்று நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால், இன்றைக்குவரை ரோஹித் வெமுலா சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவை மட்டுமின்றி, மாற்றுக்கருத்துக்கும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கும் உள்ள சனநாயக வெளி சுருங்கிக் கொண்டே போகிறது. அயல்நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (FCRA) வழியாக அரசு சாரா நிறுவனங்களை முடக்கிக் கொண்டிருக்கிறது பா.ச.க. அரசு,  தலித் மக்கள் தம் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான கதவுகள் ஒவ்வொன்றாய் மூடப்படுவதைக் காட்டுகிறது. பா.ச.க.  நாடெங்கும் உள்ள சமூக விலக்கலுக்கும் பாகுபாடுகளுக்குமான மையங்களை மூடியுள்ளது. சாதிய வேறுபாடுகள் குறித்து ஆய்வு நடைபெறும் தளம் அது. பெரும்பாலும் அதில் தலித் கல்வியாளர்களே உள்ளனர். விளிம்புநிலை மக்கள் கல்வி பெறுவதற்கான வெளிகள் சுருக்கப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக ஒடிசாவில் ராகாயாதா மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதில் கல்விப் பெற்றுவந்த அனைவரும் தலித் மற்றும் பழங்குடியினரே.
எஸ்.சி./எஸ்.டி. சட்டத்தின் மீதான தாக்குதல்:
இப்படி வன்முறைகள் பெருகியிருக்கும் ஒரு காலச்சூழலில் மார்ச் 20,2018 அன்று எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்தது. இச்சட்டத்தை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பது வெகுகாலமாக சாதி ஆதிக்க ஆற்றல்கள் எழுப்பிவரும் கோரிக்கையாகும். இச்சட்டத்தின்படி வழக்குப் பதிவதையே சாத்தியமற்றதாக்கும் திருத்தத்தைச் செய்தது தீர்ப்பு. ஒரு வழக்கை விசாரிக்க தலைப்பட்ட நீதிமன்றம் அந்தச் சட்டத்தையே திருத்தும் தீர்ப்பை வழங்கியது இச்சட்டம் எத்தகைய வரலாற்றுப் பின்னணியில் இயற்றப்பட்டு 2015 இல் வலுவாக்கப்பட்டது என்பதை அறிந்தோருக்கும் நாடெங்கும் வாழ்வின் ஒரு பகுதியாகவே வன்முறைக்கு ஆளாகிவரும் கோடிக்கணக்கான தலித் மக்களுக்கும் இந்த தீர்ப்பு அதிர்ச்சியளித்தது. தீர்ப்பை எதிர்த்து வெடித்தப் போராட்டங்களும் அரசின் வன்முறையால் நசுக்கப்பட்டது. 2018 ஏப்ரல் 2 அன்று நடந்த போராட்டத்தில் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், இராஜஸ்தான் என பா.ச.க ஆளும் மாநிலங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 10 பேர் கொல்லப்பட்டனர். பின்னர், நடுவண் அரசு இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதாக அறிவித்து அதை செய்தது. இந்த திருத்தம் பா.ச.க. வின் சமூக அடித்தளமாக இருக்கும் உயர் சாதியினர் இடையே அதிருப்தி ஏற்படுத்திவிட்டதால்தான் 2018 இறுதியில் நடந்த மத்திய பிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்களில் பா.ச.க. தோல்வியடைந்தது என ஆர்.எஸ்.எஸ். கருதியது. எனவே, உயர் சாதியினரைத் திருப்திபடுத்தும் வகையில் பொதுப்பிரிவில் இருந்து 10% இடங்களை எடுத்து உயர்சாதி ஏழைகளுக்கென்று ஒதுக்கும் சட்டத் திருத்தத்தை செய்துள்ளது பா.ச.க அரசு. சாதி ஏற்றத்தாழ்வையும் சாதிய வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டுவரத் தேவையானவற்றைச் செய்யாமல் சாதி ஆதிக்க சார்பையும் தலித் விரோதப் போக்கையும் வெளிப்படுத்தி வந்துள்ளது இவ்வரசு.
கையால் மலம் அள்ளுவோர் நிலை
’தூய்மை இந்தியா திட்டத்தை மிகுந்த ஆரவாரத்துடன் இவ்வரசு அறிவித்தது. நாடெங்கும் 2 கோடி கழிவறைகள் கட்டப் போவதாக இலக்கு வைத்தது. ஆனால், 26 இலட்சம் பேர் கையால் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையைத் தடுப்பதற்கென்று 2013 இல் இயற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. 2014 இல் தேர்தல் பரப்புரையின் போது, ’கையால் மலம் அள்ளுவதை முற்றாக ஒழிப்போம்’ என வாக்குறுதி தந்தது பா.ச.க. கடந்த இரண்டு ஆண்டுகளில் மலக் குழியில் இறங்கியதால் நச்சுக் காற்றுத் தாக்கி இறந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல நேரங்களில் இத்தொழிலில் ஈடுபட்டிருப்போர் தலித் மக்கள் என்பதைக்கூட அங்கீகரிக்க மறுக்கிறது அரசு. உண்மையில் இச்சட்டத்தைக் கடைபிடிக்கத் தவறியிருப்பதில் முதலாவது இடத்தில் இருப்பது அரசுதான். இரயில்வே துறையில் இன்னமும் கையால் மலம் அள்ளும் நிலை நீடிக்கிறது.  கையால் மலம் அள்ளுவோரின் மறுவாழ்வை உறுதி செய்யுமாறு இச்சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால், அரசோ அவர்களின் மறுவாழ்வுக்கென்று 2018-2019 நிதியாண்டில் ஒதுக்கிய நிதி வெறும் 20 கோடி ரூபாய்தான். அதுமட்டுமின்றி தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி வளர்ச்சிக் கழகத்திற்கென்று ஒதுக்கப்படும் நிதி ரூ 45 கோடியிலிருந்து ரூ 30 கோடியாக இவ்வாண்டு குறைக்கப்பட்டுள்ளது. தலித் மக்களிலேயே ஆக அதிகமாக ஓடுக்கப்பட்டும் அவல நிலையிலும் இருக்கும் ஒரு பிரிவினர் குறித்து அரசு கொண்டிருக்கும் அக்கறை இதுதான்!
குறைந்த நிதி ஒதுக்கீடு
இந்தியாவில் தலித் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த அட்டவணை சாதி உள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் உள் திட்டத்தின் கீழ் ஒதுக்கும் நிதி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தலித் மக்களின் தகவுக்கு ஏற்றால் போல் மொத்த நிதியில் பிரித்தளிக்கப்பட வேண்டும். இவ்வாட்சிக் காலத்தில் திட்டச் செலவும் திட்டமில்லாத செலவும் இணைக்கப்பட்டது. அதற்கேற்றாற் போல் அட்டவணை சாதி உள் திட்டம் மறுவடிவமைப்பு செய்யப்படவில்லை.  மத்திய அரசின் 2014-15 இல் இருந்து 2017-2018 ஆம் ஆண்டுகளின் நிதி அறிக்கையில் அட்டவணைச் சாதி உள் திட்டத்திற்கான கொள்கை மாற்றங்கள் கருத்தில் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பொதுவான நலத்திட்ட அணுகுமுறையை அரசு கடைப்பிடிக்கிறதே ஒழிய அட்டவணைச் சாதியினருக்கான குறிப்பான அணுகுமுறைக் கைவிடப்பட்டுள்ளது. இந்த ஐந்தாண்டுகளில் ஒருமுறைகூட அட்டவணைச் சாதியினரின் மக்கள் தொகை தகவிற்கு ஏற்றாற் போல் நிதி ஒதுக்கப்படவில்லை. மொத்த ஒதுக்கீட்டில் 2014-2015 இல் 8.79% மும் 2015-2016 இல் 6.63% மும் 2016-2017 இல் 7.06% மும் 2017-2018 இல் 8.91% மும் 2018-2019 இல் 6.55% மும் அட்டவணை சாதியினருக்கான உள் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. முதல் மூன்றாண்டுகள் திட்ட செலவும் திட்டமல்லாத செலவும் இணைக்கப்படுவதற்கு முன்பானது. முதல் மூன்றாண்டுகளைப் பொருத்தவரை நிரலளவாக(சராசரி) மொத்த திட்ட நிதி ரூ.15,90,287 கோடி. இதில் நிரலளவாக 7.49% தான் அட்டவணை சாதி உள் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. மொத்தமாக ஒதுக்கியிருக்க வேண்டிய ரூ 2,63,988 கோடி ஒதுக்கப்படவில்லை. பிந்தைய இரண்டாண்டுகளைப் பொருத்தவரை நிரலளவாக 7.73% தான் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது. அதாவது ஜாதவ் ஆணையப் பரிந்துரையின்படி ஒதுக்கியிருக்க வேண்டிய ரூ 1,32,016 கோடி  ரூபாயை ஒதுக்கவில்லை. தலித் மக்களில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு மிகமிக குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான மொத்த ஒதுக்கீடான ரூ 1,21,963.32 கோடியில் 0.53% மட்டுமே தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதென பாலின நிதி அறிக்கை(Gender Budget Statement) சொல்கிறது.
போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்பதோடு அப்படி ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் தலித் மக்களின் வளர்ச்சிக்கு நேரடியாகப் பங்களிக்கக் கூடிய இலக்கு நோக்கிய திட்டங்களுக்கு அன்றி பொத்தாம் பொதுவான ஒதுக்கீடாக உள்ளன. சான்றாக 2018-2019 இல் நிதி ஒதுக்கப்பட்டுள்ள தன்மை என்பது,  வெறும் 50.69% (ரூ.28,697 கோடி ரூபாய்) தான் நேரடியாக தலித் மக்களின் வளர்ச்சிக்கு துணை செய்யக் கூடிய இலக்குத் திட்டங்களுக்கு ஆகும். மீதி 49.31% (ரூ 27,920.76 கோடி) நேரடி வளர்ச்சியை இலக்கு வைக்காத திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு ரூ 857.92 கோடி, சூரிய மின் சக்தி உற்பத்திக்கு ரூ 244.50 கோடி என தலித் மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிதி வெவ்வேறு பொதுத் திட்டங்களுக்கு மடைமாற்றப் படுகிறது. இவை தலித் மக்களுக்கென்று ஒதுக்கப்படும் நிதியை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டு நெறிகளை மீறுவதாகும். இப்படியெல்லாம் செலவு செய்வதன் மூலம் தலித் மக்களுக்கும் பொதுசமூகத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்ய முடியாது.
அட்டவணை சாதி மாணவர்களுக்கான கல்வியுதவித் தொகையைப் பொருத்தவரை மத்திய அரசு  2016-2017 ஆண்டுவரை மாநிலங்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் ரூ 8000 கோடி என சமூகநீதி, அதிகாரவுரிமை அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொன்னார். அதுமட்டுமின்றி, இதை சரிசெய்யும் பொருட்டு நிலுவைகள் கொடுப்புக்காகவும் சேர்த்து 2016-17 இல் ஒதுக்க வேண்டிய 11,407 கோடி ரூபாயில் 2,791 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. 2017-18 இல் துறைசார் நிலைக்குழு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி பரிந்துரைத்த போதிலும் 556 கோடி ரூபாய் மட்டும் அதிகரிக்கப்பட்டு 3,347.99 கோடியாக உயர்த்தப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அட்டவணை சாதித் தொழிலாளர்கள் 23%, அட்டவணைப் பழங்குடித் தொழிலாளர்கள் 18% என அரசுப் பதிவுருக்கள் சொல்கின்றன. 15 நாட்களுக்குள் கூலி கொடுக்கப்பட்டாக வேண்டும். காலந் தாழ்த்தினால் இழப்பீடு கொடுக்க வேண்டும். ”காலந்தாழ்ந்த இழப்பீடு” என்ற வகையில் 2017-18இல் தொழிலாளர்களுக்கு நடுவணரசு தர வேண்டிய தொகை 2,21,22,145 ரூபாய் என்று அதன் வலைதளம் சொல்கிறது.
கடந்த 35 ஆண்டுகளில் அட்டவணை சாதிகள்/அட்டவணைப் பழங்குடிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ2.8 இலட்சம் கோடி செலவு செய்யப்படவில்லை என்ற விவரத்தை 2016 இல் ‘indiaspend’ வெளியிட்டது. உண்மையில் இந்த தொகை என்பது இந்தியாவின் விவசாய பட்ஜெட்டை விட 8 மடங்கு அதிகம். இந்தியாவில் உள்ள தலித் மக்கள், பழங்குடிகளுக்கு இதைப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்றால் தலைக்கு ரூ11,289 கொடுக்க வேண்டும். மோடி ஆட்சியில் இப்படி செலவு செய்யப்படாத போக்கில் எவ்வித மாற்றமுமில்லை.
’அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற மோடியின் வாக்குறுதியின்படி தலித் மக்கள் உள்ளடக்கப் பட்டார்களா? என்றால் இல்லை என்றே தரவுகள் சொல்கின்றன, அவரது வாக்குறுதி வெறும் வாய்வீச்சு எனப் புலனாகிறது.

செந்தில், இளந்தமிழகம்

Tuesday, 7 May 2019

சாதி ஒழித்த தமிழ்த் தேசியம்


சாதி ஒழித்த தமிழ்த் தேசியம்

தேசிய இனங்கள் எழுச்சி கொள்ளும் காலமிது. ஈராக் நாட்டில் இருந்து குர்திஸ்தானும், ஸ்பெயின் நாட்டின் பிடியிலிருந்து கேட்டலோனியாவும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தங்கள் தனிநாடு பிரகடனத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடந்த இந்த தேசியஇன எழுச்சி, தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் தங்தளை ஒப்படைத்துக் கொண்டுள்ள போராளிகளுக்கு புத்தெழுச்சியை உண்டாக்கியுள்ளது.
ambedkar 620
தன்னோரில்லா களப் போராட்டத்தில் உலகின் கவனத்தை ஈர்த்த தமிழீழத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் புதிய தேசங்களை வரவேற்று மகிழ்ந்தார்கள். சமூக வலைதளங்களில் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.
தமிழ்த்தேசிய சிந்தனையாளர்கள் மட்டுமல்லாது, சர்வதேச அரசியலாளர்களும் குர்திஸ்தான், கேட்டலோனியாவுக்கு அடுத்த தமிழீழ நாட்டை வரிசைப்படுத்தினார்கள். ஈழத்தின் விடியல் வெகுதொலைவில் இல்லை.
தமிழ்நாட்டு மண்ணில் இப்போது மீண்டும் தன்னாட்சி முழக்கம் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் இன எழுச்சியோடு களமாட அணியமாகி வருவது பாராட்டுதலுக்குரியது. பூலோகப் பரப்பு, பேசுகின்ற மொழி, நீண்ட நெடிய பண்பாட்டு கூறுகள் இப்படியாக ஒரு தேசிய அரசை நிறுவுவதற்கான அத்தனை தகுதிகளும் ஒருங்கே வாய்க்கப்பெற்றும் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருப்பதால், தமிழ்த்தேசம் இந்தியா வல்லாதிக்கத்தின் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றது. மாநிலத்துக்கான அதிகாரம் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டிடமிருந்த எஞ்சியிருந்த ஒரு சில உரிமைகளையும் தில்லி ஏகாதிபத்தியமும், நமது அண்டை தேசங்களும் அடித்துப் பிடுங்கியபடியே இருக்கின்றன. தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும் மீட்பார்களாக இல்லாமல் தில்லி ஏகாதிபத்தியத்திறகு குற்றேவல் புரியும் கங்காணிகளாக இருக்கிறார்கள். பதவிமேகம் அவர்களின் இன உணர்ச்சியை உயிரற்றதாக்கிவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம் வெளியிட்ட ஒரு அறிவிப்பு, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை வடநாட்டவர்களுக்குத் தாரை வார்க்கும் வஞ்சகத்தை தாங்கி வெளிவந்துள்ளது.
சிங்களக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை அறுறூறுக்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சிங்களவர்களின் தாக்குதல் ஒருபுறமிருக்க, இந்தியக் கடற்படையினரும் தமிழக மீனவர்களைச் சுடத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது இழுவைக் குண்டுகளைப் பயன்படுத்தி தமிழ் மீனவர்களைக் காயப்படுத்தி தமிழர்களின் தாலியறுக்கத் தயாராகி வருகிறார்கள். முன்பு ஈழத்தமிழ்ப் பெண்களின் தாலியறுக்க, சிங்களவனுக்குத் துணை நின்ற கயவர்கள் அல்லவா இவர்கள்?
தமிழ் மன்னர்களின் அரசாட்சியும் செல்வாக்கும் தமிழ்நாட்டைக் கடந்து தென்இந்தியா, இலங்கை, வங்காளம், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா வரை நீண்டிருந்ததை வரலாறுகளின் வழியே அறிய முடிகிறது. பரந்த நிலப்பரப்பையும், கடற்பரப்பையும் தன்னகத்தே கொண்டு, உலகையே கட்டியாண்டு, தன்னாட்சி புரிந்தான்; தமிழன் நிலத்தை தமிழனே ஆண்டான்
நாம் வரலாற்றில் மாலிக்காபூர் படையெடுப்பைப் பற்றி படித்திருப்போம். துருக்கியைச் சேர்ந்த மாலிக்காபூர்தான,; தன் ஆளும் வசதிக்காக முதன்முதலாக தமிழ் மண்ணை தில்லியுடன் இணைத்தான். தில்லியுடனான தமிழர்களின் அடிமைப் போக்குக்கு அச்சாரமிட்டவன் அவனே.
வந்தேறிகளின் தொடர் படைப்புகள், ஆக்கிரமிப்புகளின் நீட்சியில் தமிழர் நிலத்தை ஆர்க்காடு நவாப் ஆங்கிலேயருக்குத் தாரை வார்த்தான். ஏற்கனவே கல்வி கற்றவர்களாக இருந்த பார்ப்பனர்கள், ஆங்கிலேயர்களின் கால்களை இறுகப் பிடித்து அதிகாரமிக்க பல அரசுப் பணிகளி;ல் கோலோச்சத் தொடங்கினார்கள் அந்தளவிலான அதிகார மேலாண்மையைப் பயன்படுத்தி ஆரிய – இந்துத்துவக் கலாச்சாரத்தை தமிழ் மக்கள் மீது திணித்தார்கள்.
இந்தியத் துணைக்கண்டத்தை ஆண்டுவந்த ஆங்கிலேயர்கள் 1973-ஆம் ஆண்டு “ஒழுங்குமுறைச்சட்டம்” என்றொரு சட்டத்தைக் கொண்டு வந்து சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய ஆளுநர் ஆட்சிப் பகுதிகளை ஒன்றிணைந்து கல்கத்தா ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். இந்த நிலை நீடித்தது 1911 வரை. பிறகு தலைநகரை தில்லிக்கு இட மாற்றினார்கள். இவ்வாறாக தமிழ்நாடு அன்றிலிருந்து இன்றுவரை தில்லி வல்லாதிக்கத்தின் கட்;டுப்பாட்டுப் பகுதியாக இருந்து வருகிறது.
இந்தியத் துணைக்கண்டத்தை ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக நலனுக்காக பல்வேறு தேசிய இனங்களை இணைத்து “இந்தியா” என்ற வளையத்திற்குள் கொண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை விட்டு அகன்ற பின்பு பல்வேறு சமஸ்தானங்களை பலவந்தமாக இணைத்து செயற்கையான “இந்தியாவை” ஆயுதமுனையில் உருவாக்கினார்கள். வரலாற்றில் இதற்குமுன் “இந்தியா” என்றொரு நாடு இருந்ததில்லை.
முன்பு ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த தமிழன் 1947-க்குப் பிறகு இந்தியாவிற்கு அடிமையானான். எனவே இந்தி திணிப்பிற்கும், வட இந்திய பெருமுதலாளிகளின் சுரண்டலுக்கும் ஆளாக்கப்பட்டான். தமிழ்நாட்டுக்கான தன்னுரிமைக் கோரிக்கையும், தனிநாடு கோரிக்கையும் வலுப்பெறும் போதெல்லாம், அப்படியான அரசியலை தீவிரமாக முன்னெடுக்கும் தோழர்களை “தேச துரோகி”(?) என்று குற்றஞ்சாட்டி, தனது அதிகாரத்தை பலத்தை பயன்படுத்தி படுகொலை செய்தது இந்திய ஆளும் வர்க்கம். அப்படித்தான் தோழர் தமிழரசன் உள்ளிட்ட தமிழ்த்தேசப் போராளிகளைக் கொன்றொழித்தார்கள்.
இப்படியாக தமிழன் ஆளுமை உரிமை, கல்வி உரிமை, ஆற்றுநீர் உரிமை, வாழ்வுரிமை என அனைத்து வகை உரிமைகளையும் இழந்து அநாதையாக நிற்கிறான். இவ்வாறாக உரிமைகள் அனைத்தையும் பறிக்கொடுத்தாலும் அவற்றை உணராத வகையில் சாதி அவனின் முளைப்பரப்பைச் சூழ்ந்து, தழிழர் நலனைக் சூனியமாக்கி வருகிறது. தமிழன் சாதி தரும் போதையில் மயங்கிக் கிடக்கிறான். சாதிப் பெருமிதத்துடன் உழன்று தருக்கித் திருகிறான்.
இத்தகைய கொடிய தன்மையுள்ள சாதியின் தோற்றம் குறித்து அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
பண்டையக் காலத்தில் நிலவிய தொழில் அடிப்படையிலான பிரிவுகளே பின்னாளில் சாதிப்பிரிவினையாக பரிமாணம் அடைந்திருக்கிறது. தனித்திறன் கருதி தொழிலைச் சிறப்புறச் செய்யும் வகையில் நிகழ்ந்த அகமணத்திருமணங்களே தற்போதைய சாதி இறுக்கத்திற்கும், நீடித்த தன்மைக்கும் முதன்மைக் காரணமாகின்றன. எனவேதான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் “அகமணச் செயல்பாட்டின் தோற்றமே சாதியின் தோற்றம”; என்று வரையறை செய்கிறார்.
இன்றைய நாட்களில் சாதிய ஆணவப் படுகொலைகள் அவ்வப்போது நம் செவியை எட்டும் செய்திகளாகிவிட்டது. தந்தையானவன் தான் கொஞ்சி வளர்த்த மகளையே கொலை செய்கிறான் என்றால் எதற்காக…? சாதிய கௌரவத்;தைக் காப்பதற்காக … சாதிமாறி மணம் செய்து கொள்வதால் சாதியம் தகர்ந்து விடும் என்று கருதுகின்றான். எனவேதான் “சாதிப்புனிதம்”; கெடுத்த தம் மகளைத் தயக்கமின்றி பலி கொடுக்கிறான். இங்கே உயிரை விட சாதியம் பெரிதெனக் தெரிகிறது உயிர்மநேயமற்ற உதிரிகளுக்கு…
இதைத்தான், சாதியத்திற்கு எதிராக வாழ்நாள் பாடாற்றிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், “சாதி தெய்வீகத் தன்மை கொண்டதாக இருக்கிறது. எனவே சாதிக்குத் தரப்பட்டுள்ள புனிதங்களையும், தெய்வீகத்தையும் ஒழித்தாக வேண்டும்”; என்று தமது “சாதியொழிப்பு” நூலில் அன்றே குறிப்பிட்டார்.
வளர்ந்து வரும் நவீன சமூக அமைப்புக்கு ஏற்றாற்போல சாதியும் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கிறது. சாதி கூட்டு உறவு, கூட்டு உணர்வு மனப்பான்மைக்கு நேர் எதிரானதாக இருக்கிறது. எனவேதான் கிராம கோவில்களில் நடக்கும் பாரம்பரியமான வழிபாடு, திருவிழாக்களில் நிகழும் சாதிய மோதல்களை அமைதிக்கூட்டங்கள் பல நடத்தியும் தடுக்கவில்லை. தேவகோட்டைக்கு அருகிலுள்ள உஞ்சனை கிராமத்திலுள்ள கழனி அய்யனார்கோவில் புரவி எடுப்பு விழாவின் போது நடந்த மோதலில் தேவேந்திரகுலமக்கள் ஐவர் கொல்லப்பட்டது வரலாற்றில் இரத்தக்கறை படிந்த நிகழ்வுகளில் ஒன்று.
தமிழ்ச்சமூக பண்பாட்டு விழுமியங்களைச் சுமந்து நிற்கும் கோவில் திருவிழாக்களின் ஒரு பகுதியாக நடக்கும் தேர் வடம் பிடித்தல், பரிவட்டம் கட்டுதல் இன்னபிற நடைமுறைகளின் போது நடக்கும் சாதிய மோதல்கள் தமிழ் மண்ணில் நடந்தேறும் அவ்வப்போதைய அவலங்கள். பொது சமூகம் பயந்து நடுங்கும் கோவில், கடவுள் போன்ற பிம்பங்களுக்கே அஞ்சாது சாதிவெறியோடு கலவரமுகாமிடும் சாதியவாதிகள், பிறகெப்படி தேசிய இன உணர்வோடு இதர சமூக மக்களோடு ஜக்கியப்படுவார்கள்? இதனையெல்லாம் உணர்ந்தெண்ணி அதற்கேற்றாப்போன்று தமிழ்த்தேசியத்தின் கள உத்தியை மாற்றியமைக்க வேண்டியது இன்றைய அவசியத் தேவையாகும்.
சாதியம் சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரானது எனத் தெரிந்தும் ‘கற்றறிந்த’ சிலரே கிராமத்தில் நிலவும் சாதிய சிக்கல்களுக்கு மூலதாரர்களாக இருக்கிறார்கள். இவர்கள் சமீபகாலமாக சாதியப் பெருமித ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். ஆண்ட சாதிப் பெருமை அவர்களின் மூளையை முனை மழுங்கச் செய்து வருகிறது. இத்தகையோர் தத்தம் சாதியினருக்கு ஏற்படும் சாதிய ஒடுக்குமுறைகளைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். அவர்களுடைய ஒரே இலக்கு சாதிப்பெருமை தேடி நாயாய் அலைவது.
தூய தமிழ்த்தேசியவாதிகள் எனப்படுவோர் சாதியின் அடிப்படையில் மட்டும்தான், தமிழ்நாட்டின் மரபார்ந்த மண்ணின் மைந்தர்களை அடையாளம் காண முடியும் என்ற அபத்தமான அரசியலை முன்னெடுத்து, தமிழர்களைச் சாதியாய் கூர்மைப்படுத்தி வருகிறார்கள். இவர்கள் தமிழ்த்தேசியம் பயணிக்கும் திசைவழியை மறிக்கும் தடைக்கற்களாவார்கள்.
சாதியச் சார்புடையோர்களும், சாதிச் சங்கத்தலைவர்களும் தங்கள் சாதிச்சங்க வேலைத்திட்டத்தினூடாக தமிழர் நலன் சார்ந்த சிக்கல்களில் முகம் கொடுப்பதுகூட சொந்த சாதி மக்களிடத்து தங்கள் செல்வாக்கை விரிவாக்கம் செய்து கௌ;வதற்காகவே. இப்படித்தான் தமிழக அரசியலில் தங்கள் முகவரியை இழந்தவர்கள்கூட சாதியத் தீப்பந்தத்தைக் கையிலேந்தி சக தமிழர்களின் குடிசைகளைக் கொளுத்தியும் சாதிவெறி ததம்பப் பேசியும் தம் சாதி மக்களின் சாதிய மயக்கத்தில் அரசியல் செய்து வருகிறார்கள். இவர்கள் தமிழ், தமிழர்நலன் குறித்து வாய் கிழிய பேசி வருவதை நாம் கவனிக்க வேண்டும்.
பொதுவுடைமைச் சமூகம் படைக்கப் கிளம்பிய வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகளும், சாதி, தீண்டாமை ஒழிப்பு குறித்து தமிழக வீதிகளில் வாழ்நாள் பரப்புரை செய்த தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தியிருந்து கிளைத்த திராவிட முன்னேற்றக் கழகமும்கூட, சம்மந்தப்பட்ட தொகுதியின் சாதிப் பெரும்பான்மை மக்களின் திரளின் எண்ணிக்கையைப் பொருத்தே வேட்பாளரை நிறுத்தி சாதியத்தைப் பாதுகாக்கும் “சாத்திரப் பணி” செய்து வருகிறது.
மேலும் மாணவர்களிடையே சாதியுணர்ச்சி வளர்ந்து வருவது மிகவும் ஆபத்தானது. எனவே மாணவர்களுக்கு சாதியத்தின் தோற்;றம், சாதியத்தால் பொது சமூகத்தில் எழும் சிக்கல்கள், சாதி எதிர்ப்புப் போராட்ட வரலாறு, சாதி ஒழிப்பின் அவசியம் ஆகிய கூறுகளை முதன்மைப்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைப்பு செய்து, சரியான ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தச் செய்தல் வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கரின் “சாதியொழிப்பு” நூலை கல்லூரி பாடத்திட்டத்தில் இணைத்தல் வேண்டும். இது சாதி குறித்து ஆசிரியர்களுக்கும் புரிதலை எற்படுத்திக் கொள்ள உதவும். ஏனெனில் “சாதிய நோய்” பள்ளி, கல்லூரி எனப் பரவி, மாணவர்களை மட்டுமல்லாது ஆசிரியப் பெருமக்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது.
சாதியத்தில் தளர்வை உண்டாக்க சாதி மறுப்புத் திருமணங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் நிலவும் சாதிய வன்கொடுமைச் சம்பவங்களுக்கு எதிரான கண்டனக் குரல்கள் மட்டும் சாதியொழிப்புக்கு வழிவகை செய்யாது. தேவை சாதியத்தை நிர்மூலமாக்குவதற்கான ஒரு போர்ப்பிரகடனம். சாதி ஆதிக்கத்தை எவ்வித நிபந்தனையமின்றி எதிர்ப்பதும், சாதிமறுப்பு மணம் புரிந்தோர்க்கு அரணாக நிற்பதும், தழிழ்த்தேசிய இயக்கங்களின் செயல்திட்டங்களாக வகுக்கப்பட வேண்டும்.
சாதிமறுப்பு மணம் செய்து கொண்டோரின் குழந்தைகளை சாதியற்றோர் என்ற புதுப்பட்டியலின் கீழ் கொண்டு வரவும், அரசின் வேலை நியமனங்களில் அவர்களுக்கு பகுதி அளவிலான இடங்களை ஒதுக்கீடு செய்து தந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் போராட வேண்டும்.
“தலித் தோழர்” என்ற பதத்தையும், தலித் இயக்கங்களின் தேவையையும் இல்லாதொழிக்கும் வகையில் தமிழ்த் தேசிய அரசியலும், தமிழ்த் தேசிய இயக்கங்களும் முற்போக்கானதான கட்டமைக்கப்பட வேண்டும்.
பேராசான் மார்க்சின் இயக்கவியல் கொள்கை, “சாதி ஒழிப்பும் தனித்தமிழ் நாடும்தான் என் உயிரினும் மேலான கொள்கைகள்” என முழுங்கிய தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை, புரட்சியாளர் அம்பேத்கரின் வருண சாதிஒழிப்பு கோட்பாடு இவைகளை அடிக்கட்டுமானமாகக் கொண்டு தமிழ்த்தேசியம் எழுப்பப்பட்டால்தான் அது தமிழர்களின் அறம் போற்றக்கூடியதாக இருக்கும.; அதற்கு உழைக்கும் தமிழ்ச் சமூக மக்களை கூறு பிரிக்கும் சாதியத்தையும், வருணசாதி ஆதிக்கத்தை தத்துவநெறியாக்கிய மனு (அ)தர்ம – இந்துத்துவத்தையும், இந்துத்துவத்தை அரணாய்ப் பாதுகாக்கும் இந்தியத்தையும் வீழ்த்தியாக வேண்டும். சாதியம் – இந்துத்துவம் – இந்தியம் இவைகளால் தருவிக்கப்பட்ட கூண்டுக்குள்தான் தமிழ்த்தேசியம் அகப்பட்டுக் கிடக்கிறது. “சாதியம் – இந்துத்துவம் – இந்தியம்” இவற்றாலான எக்குக் கோட்டைகளைத் தகர்த்தெறியாமல் தமிழ்த்தேசியம் முகிழ்ந்தெழாது!
– தங்க.செங்கதிர்———-நன்றி———கீற்று–08/03/2014
தமிழ்த்தேசியத்தை வென்றெடுப்போம்-அதற்கு
சாதியொழிப்பை முன்னொடுப்போம்!

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...