Friday 18 August 2017

தோழர் விசு தக்காரா? தகவிலரா?

தோழர் விசு  தக்காரா? தகவிலரா?

தேசியவாதிகள் மத்தியிலும், இடதுசாரிகள் மத்தியிலும் மலிந்து காணப்பட்ட நடுவுநிலையற்ற தன்மை தான் தோழர் விசு ‘விசுவிஸ்ட்டாகமாறக் காரணமாய் இருந்துள்ளது. கருத்தியல் கட்டுமானத்திலும், அமைப்பியல் கட்டுமானத்திலும் இவ்விருவகை நடுவுநிலையின் மையையும் எதிர்ப்பதில் தோழர் விசு முதல் ஆளாகவும், முன்னிலை வகிப்பவராகவும் இருந்தார்.
“1952-1986 தோழர் விசுவானந்த தேவன்” எனும் தலைப்பிலான தோழர் விசு பற்றிய நினைவுநூல், தோழர் விசு தக்காரா? தகவிலரா? என்பதை மதிப்பீடுசெய்வதில் பெற்றுள்ள அடைவுகள் பற்றிய எனது திறனாய்வு.

--‘தக்கார் தகவிலர்’ என்பது                   
அவர்அவர் எச்சத்தால் அறியப்படும்—(குறள் எண்-119)

எனும் குறளை அடியொற்றி எனது திறனாய்வை முன் வைக்கின்றேன். இக்குறள் ‘நடுவு நிலை’ எனும் அத்தியாயத்துள் வருகிறது. இலங்கையின் தேசிய இனச் சிக்கலை மனதில்கொண்டு ‘நடுவு நிலை’ என்பதை முரணற்ற ஜனநாயக நிலையெனப் புரிந்துகொள்வோம். அச்சொட்டாக இல்லாதபோதும், நமக்குப் பரிச்சயமான வார்த்தையில் சொல்வதானால், தேசிய இனங்களிடையேயான சிக்கலான (complicated) உறவுகளைப் பொறுத்தும், அவ்வித சமூகத்தில் நிலவும் சீரமைவுத் தொகுப்பான(complex) வர்க்க உறவுநிலையைப் பொறுத்தும் மேற்கொள்ளப்படும் தாராளவாதமற்ற நிலைப்பாட்டைத் தான் (Non-Liberal approach)  ‘நடுவு நிலைஎனக் கூறலாம். இவ்விரு எதிர்-எதிர் பார்வையாளர்களையும் தாராளவாதிகள் - நடுவுநிலையாளர்கள் எனவோ அல்லது முன்பின்முரண் ஜனநாயகவாதிகள் – முரணற்ற ஜனநாயக வாதிகள் எனவோ அழைப்போமா? தேசிய ஜனநாயக விவகாரங்களில் தோழர் விசு முரணற்ற ஜனநாயகவாதியா அல்லது முன்பின்முரண் ஜனநாயக வாதியா/தாராளவாதியா இது தான் எமது விவாதம்.
தாராளவாதம் அல்லது முன்பின்முரண்-ஜனநாயகவாதம் பற்றிப் புரிந்துகொள்ள ஓரிரு எடுத்துக் காட்டுகள்:- 



தேசியவாதிகளின் நடுவு நிலையின்மை 

தமிழ் உழைக்கும் வர்க்கமோ தற்காப்பு வர்க்கப் போராட்டம் கூட நடத்தக்கூடாது. அவ்விதம் நடந்து கொண்டால் அல்லது வர்க்கப்போராட்டம் பற்றிப் பேசினால் அது ‘தேசிய ஒற்றுமைக்கு’ குந்தகம் விளைவிப்பதாகக் கருதப்படும். பேசுபவர்கள் குழப்பக் காரர்கள் அல்லது கம்யூனிஸ்டுகளெனத் தண்டிக்கப்படுவார்கள்.  
1) --------சிங்ஹள-பௌத்த தேசிய இனக் குழுமம்(Ethnic Group) இலங்கை எங்கணும் பரந்தும், குவிந்தும் வாழும் பிற தேசிய இனக்குழுமங்களின் மீது திணிக்கப்பட்டு வரும் அடக்குமுறையை இன பேரகங்காரவாதமாக அடையாளப்படுத்தி அதை வீரமுடன் எதிர்ப்பது ‘மாவீரத்தனம்’, 

  -----------ஆனால் “ஆண்ட பரம்பரைச்”  சைவ-தமிழ்-வேளாள தேசிய இனக் குழுமம், பிற தேசிய இனக் குழுமங்களின்மீது செலுத்தும் அடக்குமுறையை பேரகங்காரவாதமென இனங்காண்பதுவும், அதை எதிர்ப்பதுவும் தேச துரோகத்தனம்.  
                                                  
2)-------------- அறிவுசார், பண்டஉற்பத்தி சார், விநியோகம் சார் தமிழ் நடுத்தரவர்க்கம் கொழும்பின் சமூகப்-பொருளா தாரக் கட்டுமானத்துடன் இணைபிரியா முறையில் ஒட்டிஉறவாடிக் கொண்டிருத்தல் புரிந்துகொள்ளவும், சகித்தும் கொள்ளவும்படக் கூடிய ஒரு தவிர்க்கமுடியாத் தவறு.  

  ---------------ஆனால், மலையகத் தமிழரும், முஸ்லீம் மக்களும் இலங்கையின் சிங்களப் பிரதேசங்களின் சமூக-பொருளா தாரக் கட்டுமானத்துடன் இணைபிரியா முறையில் ஒட்டி உறவாடிக் கொண்டிருத்தல் சந்தேகத்துக் குரியது, கோழைத் தனமானது, முதுகெலும்பற்றது.

3) ----------தமிழீழ அமைவின் பின், தென் இலங்கையில் இருக்கும் தமிழீழத் தமிழர்களையிட்டு என்ன செய்யப்படவேண்டும் என்பதுபற்றி திட்டமிட்ட தொடர் மௌனம் அல்லது சமாளிப்புகள்.  

------------அதேவேளை, அமையப்போகும் தமிழீழத்தில் வாழும் சிங்கள, முஸ்லீம், மலையகத் தமிழர்களையிட்டு விண்ணைமுட்டும் விவாதங்கள். இடையிடையே துப்பாக்கி வேட்டுகளும் பேசுவதுண்டு.

4) --------பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் இருந்தே, யாழ்- சைவ வேளாளர், நிலம், அறிவுசார் தொழில் துறைகள் (Knowledge Economy), மரபுசார் தொழில்துறைகள், அரசியல் அதிகாரமையங்கள் ஆகிய அனைத்தையும் தம்வசம் வைத்திருப் பதற்கான வர்க்கப்போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகின்றனர். இதில் அவர்கள் சளைத்தவர்களல்ல. 
                               
------------ ஆனால், தமிழ் உழைக்கும் வர்க்கமோ தற்காப்பு வர்க்கப் போராட்டம் கூட நடத்தக் கூடாது. அவ்விதம் நடந்துகொண்டால் அல்லது வர்க்கப் போராட்டம் பற்றிப் பேசினால் அது ‘தேசிய ஒற்றுமைக்கு’ குந்தகம் விளைவிப்பதாகக் கருதப்படும். பேசுபவர்கள் குழப்பக்காரர்கள் அல்லது கம்யூனிஸ்டுகளெனத் தண்டிக்கப்படுவார்கள். பிரித்தானியக் காலனிகாலத்தில்இருந்து இது தொடர்கிறது.

4) ------------தமிழீழத் தமிழர்களுக்கு பெரிதாகவோ, சிறிதாகவோ என்ன அநீதி நடந்தாலும் உலகின் அனைத்துத் தரப்பினரும் அதைக் கண்டிக்கவேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நேசமனப்பான்மையை வெளிப்படுத்த வேண்டும். இவ்விதம் வெளிப்படுத்தாதவர்கள் அனைவரையும் பிற்போக்குவாதிகளென முத்திரை குத்துவது. (சமீபத்தில் தோழர் ஃபிடல் மீது இம் முத்திரை குத்தப்பட்டது) இதுதான் தமிழீழ தேசிய பரிவாரங்களின் பொதுப்புத்தியாக உள்ளது.

--------------ஆனால், இலங்கை நிலப்பரப்பில் மலையகத் தமிழர்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் எதிராக நடைபெறும் இன ஒடுக்குமுறைகளையிட்டும், தெற்காசியப் பிரதேசத்தில் நடந்துவரும் இன, மத ஒடுக்குமுறைகளையிட்டும், உலகின் அனைத்து மூலைகளிலும் நடபெற்றுவரும் இன ஒழிப்பு நடவடிக்கைகளை யிட்டும் மனம் பதைக்கும் தமிழீழப் போராளிகள் மிகச் சிலரேயாகும்.

இவை தமிழீழத் தேசியவாதிகளின் ஒருசாராரிடையெ காணப்படும் தாராளவாத அல்லது முன்பின்முரண்-ஜனநாயகவாதப் போக்குகளிற்கான சில எடுத்துக் காட்டுகளாகும். தமிழீழப் பரிவாரங்களில் ஏகப் பெரும்பான்மையோர் இன்றும் கூட தாராளவாதிகளாகவே (முன்பின்முரண் ஜனநாயகவாதிகளாகவே) காணப் படுகின்றனர். Liberalism/contradictory democratism தான் இவர்களின் இயலாகும். குறிப்பாக இதுதான் பிரபாகரனிஸமாகும்.
  

மரபுவழி இடதுசாரிகளின் நடுவு நிலையின்மை


இனவாத அரசியல் அதிகாரத்துக்கான போட்டியில் சிங்களவன் சிங்களவனைக் கொன்றால் அது சாதாரண விடயம், ஆனால் அதே போட்டியில் தமிழன் தமிழனைக் கொன்றால் அது பாஸிசப் பயங்கரவாதம். ஸ்ரீ மா பாஸிசம், ஜே.வி.பி பாஸிசம் என்ற கருத்துக்கட்டுமானங்கள் உருவாக்கப் படவில்லை. ஆனால் புலிப் பாஸிசம் என்ற கருத்துக்கட்டுமானம் விரைவாக உருவாக்கப்பட் டுள்ளது. இரு தலைமுறை இடதுசாரிகளும் அவர்களின் எச்சங்க ளும் இன்றும் இக்காரியத்தை செய்துவருகிறார்கள்.
இலங்கையின் இரு தலைமுறை இடதுசாரிகளும் கூட தாராளவாதிகளாகவே (முன்பின்முரண் ஜனநாயகவாதிகளாக) இருந்துவருகின்றனர். இன்றும் அதுவே தொடர்கிறது. சில எடுத்துக்காட்டுக்கள்:

1) --------------S.W.R.Dயின் தீவிர முயற்சியால் அரசியல் அரங்கில் முதன்மைநிலைக்கு கொண்டுவரப்பட்டிருந்த  சிங்கள-பௌத்த பேரகங்காரவாதக் கட்டுமானத்தை அரச நிறுவனக்கட்டுமானம் என்றநிலைக்கு வளர்த்துவிட்டது  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியேயாகும். இதன்மூலம் ஜனநாயகமுறையில் தீர்க்கப்படக்கூடியதாக இருந்த இலங்கையின் தேசிய இனச் சிக்கலை வன்முறை மூலம் தீர்க்கப்பட வேண்டியதொரு சிக்கலாக்கி (complicated)விட்டது இக் கட்சியேதான். இருந்தும், இரு தலைமுறை இடதுசாரிக் கட்சிகளும் ஸ்ரீ.ல.சு.க யை தேசிய முதலாளித்துவக் கட்சி என்றே வரையறுத்தனர். அக் கட்சிக்கும் யூ.என்.பி க்கும் எதிரானபேதத்தை பெரும் வர்க்கப்பேதமாக சித்தரித்தனர். இவ் இரு கட்சிகளும் இலங்கைத் ‘தேசியத்தை’ ஏகாதிபத்தியங்களுடன் இணைப்பதில் மூலோபாய ரீதியில் ஒன்றுபட்டேயிருந்தன என்பதைக் கண்டுகொள்ளவே யில்லை.  தந்திரோபாய வேறுபாட்டை மூலோபாய வேறுபாடாக விளக்கமளித்து, தேசப்பற்றில் முன்நிலை வகிக்கிறது என அடையாளப்படுத்தி, ஸ்ரீ.ல.சு.க யை ஆதரித்தனர். பாராளுமன்ற அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொள்வதில் அக்கட்சியுடன் கூட்டும் சேர்ந்தும் கொண்டனர். இக்கட்சி வேளாள (கொவிகம) சாதியாதிக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதை ஒரு பொருட்டாகக் கொள்ளவேயில்லை.  

-----------------ஆனால், இலங்கையில் வட-கீழ் மாகணத்தின் அரசியல் அரங்கினில் முதன்மை நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வேளாள சாதிய-தமிழ் இனவாத நிலையில் இருந்து போராடிவந்த இரு தமிழ்க் கட்சிகளையும் சாதிய ஆதிக்கவாதக் கட்சிகள் என்றனர். அதற்காக இக்கட்சிகளை முற்றாக நிராகரித்தனர். சிங்கள வேளாளக் கட்சிகளுடன் சமரசம், தமிழ் வேளாளக் கட்சிகளுடன் நிபந்தனையற்ற நித்தியஎதிர்ப்பு. ஏகாதிபத்தியத்துடனான உறவுநிலையைப் பொறுத்து இவ்விரு கட்சிகளும் தந்திரோபாய ரீதியில் வேறுபடவே செய்தன. இரு சிங்கள இனவாதக் கட்சிகளுக்கும் இடையே நிலவிய தந்திரோபாய வேறுபாட்டை மூலோபாய வேறுபாடாக பூதாகரப்படுத்தி,  ஸ்ரீ.ல.சு.க யை தேசிய முதலாளித்துவக் கட்சியெனக்காட்டிய இடதுசாரிக் கட்சிகள், தமிழ் ‘தேசியக்’ கட்சிகளிடையே நிலவிய வேறுபாட்டைக் கண்டுகொள்ளவே மறுத்தனர். 

இத்தனைக்கும் இரு தமிழ்த் ‘தேசியக்’ கட்சிகளும் முழு இலங்கைக்குமான அரசியல் கட்டுமானத்தில் முதன்மைநிலை பெற்றவைகளல்ல. முதன்மை நிலை அடைவது இவர்களின் நோக்கமுமல்ல. வடக்கு-கிழக்கு மாகாண அரச கட்டுமானத்தில் மேலாண்மை செலுத்துவதைப்பற்றி கற்பனை பண்ணக்கூடத் துணிச்சலற்றவர்களகாவே இருந்தார்கள். இருந்தும்,  இவ்விரு தலைமுறை இடதுசாரிகளும், சாதிய அகங்கார-தமிழ்த் ‘தேசிய’வாதக் கட்சிகளையே தமது நிரந்தர எதிரிகளாகக் கருதினர். ஏனெனில் அவை தமிழ் கட்சிகள் என்பதாலா?
2) சிங்கள-பௌத்த பேரகங்காரவாத ஸ்ரீ.ல.சு.க_க்கும், அதே பேரகங்காரவாத ஜே.வி.பிக்கும் இடையேநடந்த ஆயுதப்போராட்டம் சிங்கள-பௌத்த-பேரகங்கார வாததின் தலைவர் யார் என்பதற்காக நடந்த உள்நாட்டு யுத்தமாகும். இவ்யுத்தம் முழுமையுமே யுத்தவிதிமுறை மீறல்களாகவே இருந்தன.  படுகொலைகள் மிகச் சர்வசாதாரணமாக நடந்தேறின. பின்னர் அவ்யுத்தத்தை யூ.என்.பி யும் நடத்தியது. அதுவும் கொடூரமானதாகவே இருந்தது. இனவாதிகள் தமக்கிடையேயான மோதல்களின்போது நடத்திய இக்கொலைகள் பற்றி மரபுவழி இடதுசாரிகள் பெரிதாக அலட்டிக்கொள்ளவிலை. இவையெல்லாம் பாசிஸக் கொலைகளாக இவர்களுக்குத் தோன்றவில்லை. இவர்களில் பலர் இக்கொலைகாரக் கட்சிகளுடன் அரசியல் நட்புகளைப் பேணவும் செய்தார்கள். குறிப்பாக இந்திய மரபுவழி இடதுசாரிக் கட்சியொன்று ஜே.வி.பியைத் தனது தோழமைக் கட்சியாக ஏற்றுக்கொண்டுள்ளது.   

-------------------ஆனால், தமிழீழப் பரிவாரங்களிடையே நடைபெற்ற ஆயுத மோதல்கள் மட்டும் கொடியதோர் பாஸிசப் பாவமாக இவர்களுக்கு தெரிந்தது. தமிழீழப் பரிவாரங்கள் அனைத்துமே கொலைகாரக் கூட்டம் என்ற முடிவுக்கு வந்து சேர்ந்துள்ளார்கள். இனவாத அரசியல் அதிகாரத்துக்கான போட்டியில் சிங்களவன் சிங்களவனைக் கொன்றால் அது சாதாரண விடயம், ஆனால் அதே போட்டியில் தமிழன் தமிழனைக் கொன்றால் அது பாஸிசப் பயங்கரவாதம். ஸ்ரீ மாஓ பாஸிசம், ஜே.வி.பி பாஸிசம் என்ற கருத்துக்கட்டுமானங்கள் உருவாக்கப் படவில்லை. ஆனால் புலிப் பாஸிசம் என்ற கருத்துக் கட்டுமானம் விரைவாக உருவாக்கப்பட்டுள்ளது. இரு தலைமுறை இடதுசாரிகளும் அவர்களின் எச்சங்களும் இன்றும் இக்காரியத்தை செய்துவருகிறார்கள். இலங்கைக்கு பாஸிசம் அவசியம் என்பதை முதன்முதலாக வெளிப்படையாக முன்வைத்தது A.E.குணசிங்கா எனும் சிங்கள இனவாதியேயாகும். அதை வழிமொழிந்தவர் D.S.செனநாயக்கவாகும்.

3) --------------2009_இல், சிங்கள-பௌத்த பேரகங்காரவாத அரச கட்டுமானம், அதன் உச்சகட்ட முழுமை நிலையை அடைவதில் வெற்றிபெற்றுவிட்டது. இதற்கான அத்திவாரம் போடப்பட்டது 1971 இலாகும், முடிவடைந்தது 2009இல். இது சிங்கள பௌத்த பேரங்காரவாதத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆனால், 2009இல் இவ்வெற்றியைத் தக்கவைப்பதற்குப் பொருத்தப்பாடான அரசியல் கட்டுமானமொன்று இல்லாதநிலை காணப்பட்டது. இந்த நிலையை சீர்செய்ய நடத்தப்பட்ட அரசியல் சுத்திகரிப்பு இயக்கமே 2015  ‘ஜனவரிப் புரட்சியும், அதன் தொடர்ச்சியாகத் தோன்றியதேசிய அரசாங்கமுமாகும். சிங்கள பௌத்த பேரங்காரவாதத்தின் மலர்ச்சிக்குக் காரணமான ‘அப்பே ஆண்டுவஇயக்கத்தை நிபந்தனையின்றி ஆதரித்ததுபோலவே, ஜனவரிப் புரட்சியையும், அதன் தொடர்ச்சியாகத் தோன்றியதேசிய அரசாங்கத்தையும் இடதுசாரிகள் நிபந்தனையின்றி ஆதரித்தார்கள். சிங்கள பௌத்த பேரங்காரவாதத்தின் எழுச்சிகளை இலங்கைத் தேசிய எழுச்சிகளாக, அடையாளப்படுத்தி தமது ஆதரவை தாராளமாக வழங்கினார்கள்.

--------------- சிங்கள பௌத்த பேரங்காரவாதம் அரசியல் கட்டுமான ரீதியிலும், அரச கட்டுமான ரீதியிலும் தன்னைநிலைநிறுத்திக் கொண்டதைப் புரிந்துகொண்ட ஒடுக்கப்பட்ட தேசிய இனக் குழுமங்களின் முதலாளித்துவ தேசிய இனவாதத் தலைவர்கள் அரசியல் ரீதியில் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி என்றோர் அமைப்பை உருவாக்கினார்கள். இது தமிழ் பேசும் மக்கள், அரச கட்டுமானத்துறையிலும் தம்மை வளர்த்துக் கொள்வதற்காக எழும்பிய முதலாவது போர்குரலாகும். சிங்கள பௌத்த பேரங்காரவாத அரசியல் கட்டுமானத்தினதும், அரச கட்டுமானத்தினதும் எழுச்சிகளை (1956, 1972, 2009, 2014) பெரும் ஆரவாரத்துடன் ஆதரித்த முதல் இரு இடதுசாரிப் பரிவாரங்களும் தமிழ் பேசும் இனக்குழும எழுச்சியை மூர்க்கமாகக் கண்டித்தன.

நடுவு நிலையின்மையைப் புரிந்துகொள்ள இவ் எடுத்துக்காட்டுகள் போதுமானவை.


இடது சாரிகளின் நடுவுனிலையின்மையும்,
தேசிய இனவாதிகளின் நடுவுனிலையின்மையும்
ஓர் ஒப்புநோக்குப் பார்வை


தேசிய இனவாதிகளிடையே (Ethno Nationalists) காணப்படும் நடுவுநிலையின்மை ஒரு விலகலுமல்ல, விதிமுறை மீறல்களுமல்ல. இதுதான் தேசிய இனவாதத்தின் இயல்பான சிந்தனைப் போக்காகும்.

மரபுவழி இடதுசாரிகள் முதலாளித்துவத் தேசிய இனவாதக் கொள்கையை நியாயப்படுத்தும் நிலைக்குத் தாழ்ந்துசென்றாரகள். சிற்சில சந்தர்ப்பங் களில் தேசிய இனவாதிகளாகவும் நடந்துள்ளார்கள். நடுவுநிலை மீறலை நியாயப்படுத்துவதற்காகவும், தாம் இன்றும் அனைத்துலக சித்தாந்தவாதிகள் என்பதை நிலைநிறுத்துவதற்காகவும் அச்சித்தாந்தை திரிக்கத் தொடங்கினார்கள். இதனாலேயே இவர்களின் முதல்த் தலைமுறையினர் திரிபுவாதிகளென்றும், அடுத்த தலைமுறை யினர் நவீன திரிபுவாதிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

தேசிய இனவாதிகளிடையே (Ethno Nationalists) காணப்படும் நடுவுநிலையின்மை ஒரு விலகலுமல்ல, விதிமுறை மீறல்களுமல்ல. இதுதான் தேசிய இனவாதத்தின் இயல்பான சிந்தனைப் போக்காகும்.

அனைத்துலகவாதத்தின் நேரெதிரான சிந்தனையே தேசிய இனவாதமாகும். எக்காரணத்தைக் கொண்டும், எச்சூழலிலும் எந்தவொரு தேசங்களின்(Nation), தேசிய இனங்களின்(Ethnic group), ஆதிவாசி சமூகங்களின் Tribal, மொழி, மத, நிற வகைக் குழுமங்களின் மீது எந்தவித அடக்குமுறையும் செலுத்தப்படக்கூடாது; அதேபோல் எக்குழுமமும் எக்காரணத்தைக் கொண்டும் எச்சூழலிலும் பிற குழுமங்களை அடக்குவதற்கான எந்த அதிகாரக்கூறுகளையும் கொண்டிருக்கக்கூடாது. இவ் அடக்குமுறைகளையும் அதிகாரக்கூறுகளையும் எதிர்த்துப் போராடுவது அனைத்துலகவாதிகளின் இயல்பான கடமையாகும். ஆனால், இதன் அர்த்தம் அனைத்துலகவாதிகள், அடக்கப்பட்ட குழுமங்களின்  கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதல்ல. சமதர்ம உருவாக்கத்துக்கும் அக்கோரிக்கைகளுக்கும் இடையேயான தொடர்பைப் பொறுத்தே அதை ஏற்றுக்கொள்வதா, இல்லையா எனபதைத் அவர்கள் தீர்மானிப்பார்கள்.

இதுதான் தேசிய இனவாதிகளுக்கும், அனைத்துலக வாதிகளுக்கும் இடையேயான வேறுபாடாகும். ஆகவே, தேசிய இனவாதிகளிடம் நடுவுநிலைத் தன்மையை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை.

தோழர் விசு ஒரு தேசிய இனவாதியல்ல. அவர் ஒரு அனைத்துலகவாதியாகும். இக்கூற்றின் சரித்தன்மையை அவரின் எச்சத்தைக் கொண்டுதான் அளவிடமுடியும்.
ஆனால், இடதுசாரிகளின் நிலை அவ்விதமானதல்ல. கொள்கையின்படி அவர்கள் தேசிய இனவாதிகளல்ல, அனைத்துலகவாதிகளே. ஆகவே அவர்கள் அப்பளுக்கற்ற ‘நடுவு நிலையாளர்களாகஅதாவது முன்பின் முரணற்ற ஜனநாயக வாதிகளாக இருக்கவேண்டும். 

ஆனால், சுதந்திரத்தின் பின்னர் தெற்காசிய அனைத்துலகவாதிகள் அவ்விதம் இருக்கவில்லை. தத்தமது நாடுகளின் ‘தேசிய முதலாளித்துவத்தைஆதரிப்பதையே தமது பொருளாதாரக் கொள்கையாகக் கொண்டிருந்த அவர்கள், அவ்வர்க்கத்தின் உள்நாட்டு அரசியல் கொள்கையின் தீவிர ஆதரவாளர்களாக மாறியிருந்தனர். இதனால் இவர்கள் முதலாளித்துவ தேசிய இனவாதக் கொள்கையை நியாயப்படுத்தும் நிலைக்கு தாழ்ந்து சென்றாரகள். சிற்சில சந்தர்ப்பங்களில் தேசிய இனவாதிகளாகவும் நடந்துள்ளார்கள். நடுவுநிலை மீறலை நியாயப்படுத்துவதற்காகவும், தாம் இன்றும் அனைத்துலக சித்தாந்தவாதிகள் என்பதை நிலைநிறுத்துவதற்காகவும் அச்சித்தாந்தை திரிக்கத் தொடங்கினார்கள். இதனாலேயே இவர்களின் முதல்த் தலைமுறையினர் திரிபுவாதிகளென்றும், அடுத்த தலைமுறையினர் நவீன திரிபுவாதிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். முன்னையவர்கள் பாராளுமன்றமே துணையெனக் கொண்டவர்கள், பின்னையவர்கள் பாராளு மன்றப் பாதையை நிராகரிப்பதாக வாயளவில் மட்டும் கூறிக்கொண்டவர்கள். 

நாட்டுப்பற்றின் அடிப்படையில் இயல்பான நண்பர்களான தேசியவாதிகளுடன், இயல்பான எதிரிகளான தேசிய் இனவாதிகளுடனும் ஒரு அரசியல் முன்னணியை உருவாக்கிக் கொள்வதிலும், கூட்டிணைந்து வேலைசெய்வதிலும் தப்பில்லை. ஏகாதிபத்தியங்களின், வல்லரசுகளின், ஆதிக்கத்திற்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ வளர்தடை அம்சங்களுக்கு எதிராகவும் யார்யாருடன் எல்லாம் கூட்டுச்சேர முடியுமோ அவர்அவர்களுடன் எல்லாம் கூட்டுச் சேர்ந்தேயாகவேண்டும். 

அதிலும் அரசியலில் நிரந்தர எதிரிகளான தேசிய இன வாதிகளுடன்கூட கூட்டுச்சேரவேண்டியது கட்டாயமானது. தேசிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய இனவதிகள் ஒரு பிரதானசக்தி. எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் தீண்டத்தகாதவர்களல்ல. 

இலங்கையின் இடதுசாரிகள், ஒருபுறத்தில் பேரகங்காரக் குணத்தை வெளிப்படுத்தி நின்ற சிங்களத் தேசிய இன வாதிகளுடன் நெருங்கிய நட்பைப் பேணிவந்தார்கள், ஆனால் தமிழ், இஸ்லாமியத் தேசிய இன வாதிகளை தீண்டத் தகாதவர்களாக நடத்திவந்தார்கள். இலங்கைத் தேசியத்தை சிதைத்துவரும் சிங்களத் தேசி இனவாதத்தை நடுவீட்டில்வைத்துப் பூசித்தார்கள், தமிழ், இஸ்லாமியத் தேசிய இனவாதத்தை தீண்டத்தகாதவர்களாக்கி,  இலங்கைத் தேசியத்துக்கு வெளியே துரத்திவிட்டார்கள். இதுதான் முன்பின்முரண்-ஜனநாயகமாகும்.

தேசியவாதிகள் மத்தியிலும், இடதுசாரிகள் மத்தியிலும் மலிந்து காணப்பட்ட நடுவுநிலையற்ற தன்மை தான் தோழர் விசு ‘விசுவிஸ்ட்டாகமாறக் காரணமாய் இருந்துள்ளது. கருத்தியல் கட்டுமானத்திலும், அமைப்பியல் கட்டுமானத்திலும் இவ்விருவகை நடுவுநிலையின்மையையும் எதிர்ப்பதில் தோழ விசு முதல் ஆளாகவும், முன்னிலை வகிப்பவராகவும் இருந்தார். இவ்விதம் கூறுவது எந்தளவுக்குச் சரியானது என்பதை அவரின் எச்சங்களைக் கொண்டு பேசவைக்க வேண்டும். முயல்வோம்.
நூலிலுள்ள கட்டுரைகள் பற்றி:
ஒருவர் நல்லவரா(சமூக ரீதியில் வளர்திசைக் குணாசம் –Socially Positive) கெட்டவரா(சமூக வளர்தடைக் குணாம்சம் கொண்டவரா- Socially Negative) என்பதக் கண்டுகொள்ள அவரின் தனிநபர் குணவியற்கூறுகளை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்தக் கூடாது. சமூக பங்களிப்பு மட்டுங்கூட சரியான அளவுகோலாக இருக்கமுடியாது. சமூகப் பங்களிப்பையும், சமூகக் குறிக்கோழையும் இணைத்துப்பார்ப்பதே சரியான அளவுகோலாக இருக்கமுடியும்.
அரசியல் அரங்கினில் செயற்பட்ட ஒருவரை நினைவுகூறல் என்பது, பல அமசங்களைத் தழுவியதாக உள்ளது. தனிநபர் அர்ப்பணம், தொடர்தியாகம், மதி நுட்பம் செயற்திறன் ஆகிய தனிநபர் இயல்புகளும் இவற்றுள் அடங்கும். ஆனால் ஒருவரின் அரசியல் நிலைப்பாட்டையும் வர்க்கசார்பையும் புரிந்துகொள்ள இவைமட்டும்போதாது. தனிநபர் இயல்புகளைப் பொறுத்தவரை தோழர் ஸ்ராலினும், ட்ரொக்சியும் ஒரேதட்டில் வைக்கப்படக் கூடியவர்களே, அதேபோன்று மோகன்லால் காந்தியும் அண்ணாத்துரையும்; காமராஜரும் கக்கனும்; பூலான் தேவியும் ஜெயலலிதாவும்; பிரபாகரனும் ராஜபக்‌ஷவும், இப்படிப் பல உதாரணங்களைக் காணக்கூடியதாய் உள்ளன. 

ஒருவர் நல்லவரா(சமூக ரீதியில் வளர்திசைக் குணாசம் –Socially Positive) கெட்டவரா(சமூக வளர்தடைக் குணாம்சம் கொண்டவரா- Socially Negative) என்பதக் கண்டுகொள்ள அவரின் தனிநபர் குணவியற்கூறுகளை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்தக் கூடாது. சமூக பங்களிப்பு மட்டுங்கூட சரியான அளவுகோலாக இருக்கமுடியாது. சமூகப் பங்களிப்பையும், சமூகக் குறிக்கோழையும் இணைத்துப்பார்ப்பதே சரியான அளவுகோலாக இருக்கமுடியும். தனிநபர் பண்பாட்டுக்கூறுகளை வைத்துக் கொண்டு காந்தியையும் நேருவையும் அளந்தால் காந்தி வெல்வது நிச்சயம், ஆனால் சமூகப்பங்களிப்பைக் கொண்டு அளந்தால் காந்தி படுதோல்வி அடைவார். அதுபோல் ஹிட்லரையும், ஸ்ராலினையும் அளந்தால் தனிநபர் ஆளுமைக்கூறில் ஹிட்லர் வெல்லக்கூடும், சமூகப் பங்களிப்பில் ஸ்ராலின் மலையானால் ஹிட்லர் மடுவாவார். நிற்க:

“1952-1986 தோழர் விசுவானந்த தேவன்” எனும் நூலில் சண்முகம் சுப்ரமணியம், எஸ்.வி. இராஜதுரை, சமுத்திரன், மு.சி. கந்தையா, அ.மார்க்ஸ் ஆகியோரது ஐந்து கட்டுரைகள் மாத்திரமே தோழரால் உருவாக்கப்பட்ட கருத்துக் கட்டுமானம் பற்றிப் பேசுகின்றன. பா.பாலசூரியனின்  ‘விசுவாசம்எனும் கட்டுரை, இக்கருத்துக் கட்டுமானத்தின் பக்கம் நின்றுகொண்டு இக்கருத்துக் கட்டுமானம் உருவான வரலாறுபற்றிப் பேசுகிறது. 

விசுவின் கட்டுரையில் விசு தன்னைப்பற்றி தானே பேசுகிறார். இவை தவிர மீதம் அனைத்தும் தனிநபர் ஆளுமைக்கூறுகளை முன்கொண்டு வருவதற்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளன. தனிநபர் ஆளுமைக் கூறுகள் புறக்கணிக்கப்படவேண்டும் எனக் கூறவில்லை. குறை நிறைகளுடன் விமர்சனங்களுடன் அவை அறியப்படவேண்டும், ஆனாலும் ஒருவரின் வகிபாகத்தை எடைபோடுவதற்கு அது ஒரு அளவுகோலாகக் கொள்ளப்படக் கூடாது.

முன்னர் குறிப்பிட்ட ஐந்து கட்டுரைகளில் எஸ்.வி.இராஜதுரை, சமுத்திரன் ஆகிய இருவரினது கட்டுரைகள் மாத்திரமே ஒரேநேரத்தில் தேசியவாத தாராளவாதத் தையும், இடதுசாரித்துவ தாராளவாதத்தையும் எதிர்த்து தோழர் விசுவால் முன்வைக்கப்பட்ட நடுவுநிலைக் கோட்பாட்டை ஆதரித்து நிற்கின்றன. அந் நிலைப்பாட்டின் முக்கியத்துவத்தையும் முன்வைக்கின்றன. இவர்கள் இருவரும் தமது கட்டுரைமூலம் தோழர் விசுவைப் பின்தொடர்கிறார்கள். வரலாற்றுக்கு அழுத்தம் கொடுத்தாலும் பாலசூரியனின் கட்டுரையும் இதே காரியத்தைப் புரிந்துள்ளது.

மு.சி.கந்தையாவின் கட்டுரை எந்த வஞ்சனையும் இன்றி தோழர் விசுவின் தனிநபர் ஆளுமையை ஏற்றிப் போற்றுகிறது. ஆனால், கொலைக்களத்தினுள் புகுந்துவிட்ட துணிச்சலைப் பாராட்டுவதற்குப் பதிலாக கொலைஞர்களின் அணியில் சேர்ந்துவிட்டாரே என்று வேதனைப்படுகிறது. தமிழ்த் தேசிய இனப் பரிவாரங்களையிட்டு இடதுசாரி தாராளவாதப் போக்கின் வர்ணனையாகி விடுகிறது.

சண்முகம் சுப்ரமணியம்: சேராத இடம்சேர்ந்து சோரம்போன நல்லவர் என்கிறார். நல்லவராக இருக்கும் போதே தீக்குணங்களைக் கொண்டிருந்தார் என நினைவூட்டுகிறார். இடதுசாரி முன்பின் முரண் சிந்தனைப் போக்கில் இருந்து விசுவை மதிப்பீடு செய்கிறார்.

அ.மார்க்ஸ்: தோழர் விசுவின் நடுவு நிலைப்போக்கை ஆதரிக்கிறார். விசுதான் அதன் மூலவர் என்பதையும் கூறுகிறார். ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே விசு தனது நடுநிலைப் போக்கில் இருந்து தடம் புரளத் தொடங்கிவிட்டார் என்ற கருத்தை ஆதாரத்துடன் முன்வைக்கின்றார். இதே நூலில் முன்வைக்கப்பட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அறிக்கையை இதற்க்கு ஆதாரமாக காட்டுகிறார்.  இது ஒரு ஆக்கபூர்வமான விமர்சனமாகும். இவ்விமர்சனம் சரியானதுதானா என்பது ஆராயப்படவேண்டும். அவ்விதமானால் அது எந்தளவிற்கு என்பது பார்க்கப்படவேண்டும்.

வரட்டுச் சூத்திரவாததை தொடர்ச்சியாகக் கண்டித்துவந்த விசு, இவ்வறிக்கையிலும் கட்சி, தேசியஎழுச்சி, ஆயுதப்பயன்பாடு தொடர்பான விடயத்தில் நிலவும் வரட்டுச் சூத்திரவாதப் போக்கை நிராகரிக்கும் நிலையை நோக்கி நகர்கிறார்போலவே தெரிகிறது. லத்தீன் அமெரிக்க, குறிப்பாக கியூப மாதிரியை நோக்கிய ஒரு நகர்வாகவே கருதுகிறேன்.  தமிழீழம்,காஷ்மீர், வட-கீழ் மாநிலங்கள், மியான்மர், பலுசிஸ்தான், குருதிஷ்தான் ஆகிய பகுதிகளில் சீன சூத்திரம் பொருத்தப்பாடற்றதேயாகும். சீன சூத்திரத்தைப் பின்பற்றினால் முரணற்ற ஜனநாயக வாதிகள் முன் கூறிய பகுதிகளின் தேசிய விடுதலையின் தலைமைப் பொறுப்பை ஏற்கமுடியாது.

அதேநேரத்தில் 1983 இல் எழுதப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள மலையக மக்கள் பற்றிய கட்டுரையில் தமிழ்த் தேசிய இன வாதத்திலும், தேசிய இனச் சிக்கல் தொடர்பான இடதுசாரி தாரளவாதக் கருத்தோட்டத்திலும் வரட்டுச் சூத்திரவாதத்திலும் இருந்து விலகிக்கொள்ள முயல்வது தெரிகிறது, ஆனால் இம் முயற்சியில் தோல்வி கண்டுள்ளமையும் தெரிகிறது. முடிவில் இதுபற்றி எதுவும் சொல்லமுடியாது என்று கூறுவதன் மூலம் விலகிக் கொள்வதில் தனக்கிருக்கும் நெருடலை புரிந்துள்ளமையும் தெரிகிறது.

எவ்விதமும் ஒரு திருப்பு முனையாக இருந்த அவர் மறைந்து விட்டார், ஆனால் ஒரு திருப்புமுனை தேவை எனும்அவா மறைந்துவிடவில்லை, ஒரு திருப்புமுனையை உருவாக்குவதற்காக அவரால் கட்டி எழுப்பப்பட்ட கருத்தியல் கட்டுமானம் மறையவில்லை. அது மறையவும் கூடாது, மறையவும் மாட்டாது. ஆனால், ஒரு திருப்புமுனையை உருவாக்குவதற்கு அவசியமான அமைப்புக் கட்டுமானம் இன்னமும் உருவாகவில்லை. பயணம் தொடர்வோம்.




No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...