Wednesday 14 June 2017

வேலனின் “தேசிய இனங்களின் காலம்”


இது எனது முகநூல் நண்பர் வேலன் அவர்களால் சமீபத்தில் வெளியிடப்பட்ட நூலுக்கான தலைப்பாகும். காலப்பொருத்தமான தலைப்பு. மிக அவசியமானதொரு தர்க்கம். எனது கருத்தும் இதுதான். நான் இதை நான்காம் உலகநாடுகளின் காலமென விரிவுபடுத்திக் குறிப்பிடுகிறேன். இப்பகுப்பு தேசிய இனங்களையும் உள்ளடக்கியதாகும். இருந்தபோதும் தேசிய இனங்களின் காலம்நூலை ஆவலுடன் படித்தேன்.

1050கள் இருந்து 1970கள் வரையான காலம் சோஷலிஸ நாடுகள் + மூன்றாம் உலகநாடுகளின் காலமாக இருந்தது. ஐக்கிய சோவியத் சோஷலிஸக் குடியரசின் (USSR) சிதைவுடன் இந்நிலமையில் பின்னடைவுகள் ஏற்படத் தொடங்கின. USSR இன் வீழ்ச்சி மட்டுந்தான் காரணம் என்பதில்லை. ஏனெனில் இதே காலப்பகுதியில் செஞ்சீனா நிமிர்ந்த நெஞ்சுடனும் நேர்கொண்ட பார்வையுடனும் ஏகாதிபத்திய் உலகை எதிர்த்து நின்றது. இருந்தும் கூட, ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் சோஷலி ஸ நாடுகளின் துணைப்படையாகச் செயற்பட்டு வந்த முன்றாம் உலக நாடுகள் தமது முற்போக்கு வகிபாக த்திலிருந்து பின்வாங்கத் தொடங்கியிருந்தன. இந் நாடுகளின் அரசுகள் இனவாத தேசிய அரசுகளாக வும், தத்தமது நாட்டு இனக்குளுமங்களை ஒடுக்கும் உள் காலனி அரசுகளாவும், தீவிர கம்யூனிஸ எதிர்ப்பு அரசுகளாகவும் மாறத்தொடங்கியிருந்தன. அதாவது ஒரு இனவாதா தேசிய அரசுக்குரிய குணாம்சங்களை வெளி ப்படுத்தி நின்றன. இக்காலப்பகுதியில், இருமுனை உலகம் (ருஷ்யா, அமெரிக்கா) ஒருமுனை உலகமாக மாறியிருந்தது. இதனால் மூன்றாம் உலக நாடுகளின்மீது அமெரிக்க செல்வாக்கு அதிகரித்தது. மூன்றாம் உலக நாடுகளில் ஏற்ப்பட்ட அகநிலை மாற்றத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. ஏகாதிபத்தியத்திற்கும் வல்லரசியத்திற்கும் எதிராக இருந்த உலகளாவிய அணி சிதைந்து போகி ன்றது. ஒரு வெற்றிடம் ஏற்படுகின்றது. இந்நிலையை உலகளாவிய எதிர்ப்புரட்சி வெற்றிபெற்றிருந்தகால மெனக் கூறலாம்.

வரலாறு வெற்றிடத்தை அனுமதிப்பதுவும் இல்லை, எதிர் புரட்சியின் வெற்றி நிலையானதுமல்ல. இதானால் அடுத்த புரட்சி அலை உலகளவில் உருவாகத்தொ டங்கியது. அதுதான் நான்காவது உலகநாடுகளின் போராட்ட அலையாகும். நான்காவது உலகமெனக் கூறுவது ஒடுக்கப்பட்ட அனைத்துவகை இனக்குளும ங்களையுமேயாகும். தேசிய இனங்கள், பழங் குடிகள், ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினர், பாலின உரிமை மறுக்கப்பட்டோர், வெள்ளையனின் மொழியில் “கறுப்பர்”, ஒடுக்கப்பட்ட மதப்பிரிவினர், அகதிகள் ஆகிய அனைவருமே இதில் உள்ளடங்குவர்.

ஆகவே இதைத் தேசிய இனங்களின் காலமென மட்டும் வரையறுப்பது தவறானதாகும். இது ஒரு வாக்கிய ப்பிழையாக இருந்தால் திரித்திக் கொள்ளலாம். ஆனால் இந்நூலில் இது ஒரு கண்ணோட்டப்பிழையாகவே வெளிவந்துள்ளது.

காரணம்:- இது தேசிய இனக்களின் காலம் என்பதை நிரூபிக்க இலங்கையை ஒரு மாதிரியாக(sample-case study) எடுத்துள்ள இந்நூல்;
1. -- சாதிய இனக்குழுமங்களின் உரிமைக்கான போராட்டங்களை முற்றாகவே மறுக்கின்றது.

2.   -- இஸ்லாமியரின் தேசிய இனத் தனித்துவம் எந்த இடத்திலும் வலியுறுத்தப்படவில்லை. எள்ளி நகையாடும் போக்கு இளையோடி நிற்கின்றது.

3.   ---மலையகத் தமிழர்களின் தேசிய இனத் தனித்துவம்  பற்றியும் எதுவுமேயில்லை.

4.   --- வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையேயான பிரதேச வேறுபாட்டை வெறுக்கத்தக்க ஒரு போக்காகவே நோக்குகிறது. யாழ்குடாநாட்டின் சமூக உருவாக்கத்தையும் கிழக்கின் சமூக உருவாக்கத்தையும் தனித்தனியாக எடுத்துக் கொண்டால், சமூக விழுமியங்கள், சமூக நியமங்கள் ஆகியவற்றின் பக்கத்தில் யாழ்குடாநாடு தாழ்ந்தது, கிழக்கு உயர்ந்தது. வடக்கின் பண்பாட்டுக் குறியீடு ஆறுமுகநாவலர், கிழக்கின் குறியீடு விபுலானந்தர். மடுவும் மலயுமாக நிற்கும் இவ்விருவரையும் ஒப்பிட்டால் குடாவிற்கும், கிழக்கிற்கும் இடையேயான வேறுபாடு புரியும். ஆகவே, குடாவின் பண்பாட்டு ஆக்கிரமிப்பில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை கிழக்கிற்கு உண்டு. இதனால், கிழக்கு நடத்தும் போராட்டம் சமூகநீதிக் கண்ணோட்டதில் இருந்து பார்த்தால் முற்போக்கானதே. இதை அர்த்தமற்ற பிரதேசவேறுபாடென்று வகைப்படுத்திக் கொள்ளக்கூடாது.

5.   --இதே போன்றதுதான் குடாநாட்டிற்கும் வன்னிக்கும் இடையேயான வேறுபாடுமாகும். பிரதேச வேறுபாடுகள் செயற்கையானவையல்ல. சமூக உருவாக்கத்தில் உள்ள அசமத்துவமான வழர்ச்சியே அதற்கான காரணங்க ளாகும். தேசிய இன உருவாக்க நிகழ்வின் போது இவை தீர்க்கப்பட்டேயாகவேண்டும். ஆனால் அத் தீர்வு சமூகவளர்ச்சிக்குச் சாதகமான முறையில்தான் அமைய வேண்டுமே தவிர பாதகமான முறையிலோ அல்லது அதைத் தடுக்கக்கூடிய முறையிலோ அமையக்கூடாது.

6.   ---சிங்களத் தேசிய இனம் முற்றாகவே புறக்கணிக்கப்படுகிறது. இந்நூலாசிரியர் ஒரு தேசியவாதியாக, ஏன் தேசிய இனவாதியாக ஒரு இருந்திருந்தாலுங்கூட இவ்வித கேள்வி கேட்கமாட்டேன். அவர்களுக்கு இவ்வித கேள்வி புரிகிறதோ இல்லையோ என்பதல்ல பிரச்சனை. அவர்களிடம் அவ்வித கேள்வி கேட்பது தவறென்பதுதான் பிரச்சனை. தேசியவாதம், தேசிய இனவாதம், மார்க்ஸிஸம் ஆகியன கண்ணோட்டம் சார்ந்த பிரச்சனைகளாகும். பட்டறிவு, நூலறவு ஆகிய இரண்டினதும் துணைகொண்டு ஒருவர் தானே தனக்கு ஏற்படுத்திக்கொள்ளும் ஒன்றுதான் கண்ணோட்டமாகும். அதையாரும் யார்மீதும் திணிக்க முடியாது. இவ்விதம் திணிக்க முற்படுவது கருத்தியல் வன்முறையாகும். கருத்தியல் வன்முறை ஆயுத வன்முறைக்கு இட்டுசென்ற அவலத்தை கண்டவர்கள ல்லவா நாம்?

தோழர் வேலன், இந்நூலில் தன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் எனப் பெருமையுடன் பல இடங்களில் சொல்லிக்  கொள்வதால்தான் இக்கேள்வி.  
           
தேசிய இனங்களின் காலம் பற்றிய மாதிரி ஆய்வில் சிங்களத் தேசிய இனம் உள்ளடக்கப்படாதது ஏன்? அவ்விதமானால் நூலின் தலைப்பை ஆழப்படும் தேசிய இனங்களின் காலம் எனக் குறிப்பிட்டி ருக்கலாம். 

சிங்கள-பௌத்த-பேரகங்காரவாதத்தின் அரசிய-பொருளிய-இராணுவ கட்டுமானத்தால் பிரயோகிக்கப்பட்டுவரும் உள்-காலனியல் அடக்குமுறை சொந்தக்காலில் நிற்கு மளவிற்கு சுயசக்தி கொண்டதல்ல. இது ஏகாதிபத்தி யத்தாலும், வல்லரசியத்தாலும் பேணிப்பாதுகாக் கப்பட்டுவரும் அதிகாரக் கட்டுமானமேயாகும். ஆகவே உள்-காலனியல் அடக்குமுறைக்கு எதிரான தேசிய இனப்போராட்டங்கள் படிப்படியாக வளர்ச்சியுற்று உள்-காலனியல் கட்டுமானத்துக்கு எதிரான போராட்டமாக மலரும். விடுதலைப்புலிகள் தோற்றதற்கான காரணம் இப்புரிதல் இல்லாமையேயாகும். எஜமானர்களைக் கணக்கில் கொள்ளாமல் அவர்களால் ஏவப்பட்ட நாய்களை மட்டும் கணக்கில் கொண்டிருந்ததுதான் அவர்களின் தவறு. எஜமானர்கள் களம் இறங்கிய பின்னர், எல்லோரும் சேர்ந்து எம்மை வஞ்சித்து விட்டர்களெனத் தேம்பிஅழுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அந்தஎல்லோரும் வேறுயாருமல்ல, பேரகங்கார வாதநாய்களின் எஜமானர்களாகும்.  
                  
இத்தவறுக்கான காரணம் என்ன? சிங்கள தேசிய இனந்தான் பிரதான எதிரியெனக் கருதியதேயாகும். இதுதான் தேசிய வாதிகளின் பொதுவான கருத்தாகும். ஒரு மார்க்ஸிஸ்ட் என்ற முறையில் தோழர் வேலனின் கருத்தும் இதுதானா? சிங்கள் தேசிய இனத்தையும் நான்காம் உலகத்துள் கொணர்வது எவ்விதம் என்பதுதான் ஒரு மார்க்ஸிஸ்டின் குறிக்கோளாக இருக்கவேண்டும்.                          
இது தேசிய இனங்களின் காலம் என்பதை நிறுவுவதற்கான ஒரு மாதிரி ஆய்வாக இலங்கை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதால்தான் இக்குறைபாடு கள் சுட்டிக்காட்டப்படுவது அவசியமானதாக வுள்ளது. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய பிறிதோர் நூலை தோழர் வேலனிடம் இருந்து எதிர்பார்ப்போம்.
நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்நூலுக்கு “விடுதலைப் புலியிஸமும் ஓடுகாலித்தன இடதுசாரி யிசமும்” எனும் தலைப்பிட்டிருந்தால் அதிக பொருத்தமானதாக இருந்திருக்கும். மேற்சொன்ன கேள்விகள் எதுவும் அவசியப்பட்டிருக்க மாட்டாது.

தோழர் வேலனால் முன்வைக்கப்படும் புலியிஸம் பற்றி நான் எதுவும் கூறவிரும்பவில்லை. அவரின் கருத்தை ஒட்டியும் வெட்டியுமான விவாதங்கள் தொடர்ந்து நடந்தவண்ணமேயுள்ளன. இனியும் தொடரும். அதுபற்றி விவாதிக்கப் பலர் உள்ளனர். ஆகவே, வேலனின் ஓடுகாலித்தன இடதுசாரியியம் பற்றிமட்டும் சில கருத்துக்களை முனவைக்க விரும்புகிறேன். அதுவும் இவ்விடத்திலல்ல. “மூன்றாம் உலக நாடுகளின் காலமும்-இலங்கையின் இடதுசாரி இயக்கங்களும்எனும் சிறுகட்டுரைவடிவில் முன்வைக்கின்றேன்.
   அரிநேசரட்னம் கௌரிகாந்தன் 15/06/2017


No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...