Tuesday 14 May 2019

இது ஒரு பாராளுமன்றம்! இதற்கு ஒரு தேர்தல்! வெட்கக்கேடு


இது ஒரு பாராளுமன்றம்! இதற்கு ஒரு தேர்தல்!
வெட்கக்கேடு

மக்கள் ஜனநாயகத் தேசியவாதிகளின் பார்வைக்கு.

[ஒரு கலந்துரையாடல் தொகுப்பு. அத்துடன் முழக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளது ] அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
உலக வரலாற்றில், பல்வேறு இனங்கள் இன்றுவரை தோன்றி வளர்ந்துள்ளன. தடைகளை கடந்து தொடர்ந்து வளர்ந்தும் வருகின்றன . இவற்றில் முதலில் சில இனங்களில் , நவீன தேசிய தொழில் துறையும், நவீன பெரும் விவசாயப் பண்ணைகளும் ,கூட்டுறவு பண்ணைகளும் தோன்றி வளர்ச்சி பெற்றது.
இவ்வாறு வளர்ச்சி பெற்ற இனங்களில், தேசங்களில்தான், நவீன வளர்ச்சிக்கு தடையாய் இருந்த அரசர்கள் ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. அரசர்கள் ஆட்சியால் பாதுகாக்கப்பட்டு வந்த, நிலப்பிரபுக்களும் ,பண்ணையடிமை முறைகளும் ஒழிக்கப்பட்டது. ஒரு இனப்பிரதேசம் முழுதும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டு ஒரு புதுவகை [போலீஸ்,ராணுவம் ,நீதி நிர்வாகம், ரெவின்யூ பிரிவுகளைக் கொண்ட ] அரசு இயந்திரம் தோற்றுவிக்கப்பட்டது. இவற்றின் தேவையிலிருந்து பாராளுமன்றமும், பாராளுமன்ற தேர்தல் முறையும் உருவாக்கப்பட்டது. எனவே பாராளுமன்ற, பாராளுமன்ற ஜனநாயகம் என்றாலே, பொதுவாக அது இனங்களிள், தேசங்களின் [மாநிலங்களின்] பாராளுமன்றத்தைத்தான் குறிக்கும்.
டெல்லி பாராளுமன்றத்தை, ஒரு முறையான பாராளுமன்றம் என ஏற்க முடியுமா ?
= = = = = = = = = = = = =
டெல்லி பாராளுமன்றமோ, ஒரு குறிப்பிட்ட இனத்தின் உற்பத்தி வளர்ச்சி, மற்றும் சமூக வளர்ச்சியின் தேவைகளில் இருந்து தோன்றியது அல்ல. ஆங்கிலேயர்களுக்கு நேரடி அடிமையாக இருந்த காலத்தில் அவன் இனங்களை அடக்கி, அடிமைப்படுத்தி, அனைத்து வளங்களையும் கொள்ளையடித்து கொண்டு செல்ல, ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டியிருந்தது. அதற்கான தனது ஏஜெண்டுகளையும், அமைப்பையும் தோற்றுவிக்க வேண்டியிருந்தது. இதை சாதிக்க, இந்தியாவில் அனைத்து இடங்களிலும் தனது கையாட்களாக, கூட்டாளிகளாக செயல்பட்டு வந்த,இன விரோத, மக்கள் விரோத, தேச துரோகிகளான தரகு முதலாளித்துவ கும்பல், கிராமப்புற நிலப்பிரபுத்துவ,மற்றும் நிலப்பிரபுத்துவ முறையிலான ஆதிக்கக் கும்பல்களின் உணர்வையும், தேவைகளையும் கணக்கில் கொண்டு; சுரண்டலையும் ஆதிக்கத்தையும், சுலபமாக நடத்தவும், தனது கைக் கூலிகளையும் கச்சிதமாக பாதுகாக்கவும்; அந்நியனால், அயோக்கியத்தனமாக நுழைக்கப்பட்டதுதான் பாராளுமன்ற முறையும், பாராளுமன்ற தேர்தல் முறையும்.
அன்று அடிமைச் சாசன அரசியல் சட்டத்துடன் உருவாக்கப்பட்ட அதே பாராளுமன்றம் தான், சில சீர்திருத்தங்களுடன், பிரமாதப் படுத்தப்பட்டு இன்னும் தொடர்கிறது. எனவே இதை ஒரு சனநாயக பாராளுமன்றம் என்றோ,இதற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்பநடக்கும் தேர்தலை, ஒரு சனநாயக பாராளுமன்ற தேர்தல் என்றோ ஏற்க முடியாது. அப்படி யாராவது ஏற்றால், அது மத நம்பிக்கை உள்ள ஒருவர், சாத்தானையும், சைத்தானையும்,பேய்களையும் கடவுள் எனக் கருதி வழிபடுவதைப் போன்றதாகும்.
டெல்லி பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்: ==================== இன்றும் கூட டெல்லி பாராளுமன்றம் என்பது,
[1] அந்நிய நாட்டு ஏகபோக முதலாளித்துவ கும்பல்,
[2] ஒவ்வொரு இனத்திலும் உள்ள உள்நாட்டு ஏகபோக (தரகு) முதலாளித்துவ கும்பல்,
[3]ஒவ்வொரு இனத்திலும் உள்ள கிராமப்புற எதேச்சதிகார ஒடுக்கு முறை கும்பல் .
ஆகிய இந்த மூன்று கொள்ளைக்கார கும்பலின் கூடாரமாகவே உள்ளது. இது படைபலத்தைக் கொண்டு இனங்களை இணைத்து [இந்திய சிறைக்குள் அடைத்து] ஒடுக்கி,சுரண்டி வருகின்றது.
இனங்களின் சுதந்திர தேசீய தொழில் வளர்ச்சியை, வர்த்தக வளர்ச்சியை தடுத்து நசுக்கி வருகின்றது. பின் தங்கிய கிராமப் புறங்களையும், சாதி,மதவாத ஆதிக்க கும்பல்களை பாதுகாத்துவருகின்றது.
மாநில எல்லை , இந்திய எல்லை , என்ற இரண்டு எல்லைகளும் இரண்டு சிறை மதில்களாக நின்று இனங்களை ஒடுக்குகின்ற அமைப்பாக உள்ளது. எனவே அனைத்து இனங்களின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், ஜனநாயகத்துக்கும், சுதந்திரத் -திற்கும் தடையாக, எதிராக உள்ள டெல்லி பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.
இந்த தேர்தல் புறக்கணிப்பு அனைத்து தேர்தல்களையும் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவ அமைப்புகளையும் புறக்கணிப்பதாகுமா?======= ஒரு இனவிரோத, மக்கள் விரோத பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும், அதற்கான தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பது; எக்காரணம் கொண்டும் பொதுவாக அனைத்து தேர்தல்களையும் அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதித்துவ அமைப்புகளையும் உறுப்புகளையும் கலைக்க வேண்டும் என்று பொருள்படாது.
மாறாக ஒரு தேசீய இனம், தான் வாழும் தேசத்தின் சுதந்திர வளர்ச்சிக்காக, ஒரு சுதந்திர அரசை அமைத்துக் கொள்ள, தனக்கென தனி பாராளுமன்றத்தை அமைத்துக்கொள்ள [நார்வே தானே ஒரு தேர்தலை நடத்தி ஸ்வீடனில் இருந்து பிரிந்து சென்றதே அந்த வழிமுறையை போன்று] இன்றைய சூழலில் ஒவ்வொரு இனமும் பாட்டாளி வர்க்கத் தலைமையிலான ஒரு கூட்டணி அரசமைப்பதற்கான தேர்தலை நடத்த நாமே மக்களை முழுமையாக திரட்ட வேண்டும். தலைமை தாங்க வேண்டும். இதன் மூலம் அந்நிய முதலாளிகளின் ஆதிக்கமற்ற, உள்நாட்டு ஏகபோக முதலாளிகளின் ஆதிக்கமற்ற, கிராமப்புற எதேச்சதிகார கும்பல்களின்ஆதிக்கமற்ற, சாதிகளற்ற, சாதி குடியிருப்புகள் இல்லாத, அதாவது அந்நிய ஆதிக்க மற்ற இனங்கள், சாதிகளற்ற தேசங்கள், ஆதிக்கக்காரர்கள் அற்ற கிராமங்கள், நகரங்களைக் கொண்ட ஒரு தேசத்தை அதற்கான சுதந்திர அரசை [மாநில பாராளுமன்றத்தை] உருவாக்குவோம்.
ஓட்டு சரக்காவது ஏன்? அதை வாங்குபவர்களும், விற்பவர்களும் உருவாவது ஏன்? =======முன்பே குறிப்பிட்டுள்ளபடி இனங்களின் பாராளுமன்றமும் பாராளுமன்ற ஜனநாயகமும் , ஜனநாயகத் தேர்தலைப்பற்றி மக்கள் அறிந்திருக்க வேண்டுமானால்; அந்த தேசம், தேசியம், இனம் தொழில்மயமாக்கப்பட்டிருக்க வேண்டும். விவசாயம் பெரும் பண்ணைகளும் கூட்டுறவு பண்ணை மயமாக்கப்பட்டும், உற்பத்தியில் ஈடுபடுவோர் தொழில்துறை பாட்டாளிகளாக்கப்பட்டும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பெரும்பான்மை மக்கள், குடும்பத் தலைவரின் தலைமையில், சுய வேலை வாய்ப்பை உருவாக்கிக்கொண்டு, சுய தேவை உற்பத்தியில் ஈடுபட்டு வாழும் நிலை உள்ளவரை, மக்களுக்கு ஜனநாயக உரிமைக்கான [தொழிற்சங்க உரிமை, போராடும் உரிமை, வேலை நிறுத்த உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, வேலை நேரத்தை தீர்மானிக்கும் உரிமை, மருத்துவம், காப்பீடு கல்வி .......]
போன்ற எந்த ஜனநாயக உரிமையும் அவர்களின் உற்பத்தி முறைக்கு, வாழ்க்கை முறைக்கு, அத்தியாவசியமானதாக, தவிர்க்க முடியாததாக இல்லாததால், அது பற்றி ஒன்றும் அறியாதவர்களாக உள்ளனர். இதனை தெளிவாக உணர்ந்து கொண்டுள்ள, தெரிந்துகொண்டுள்ள, ஓட்டு சீட்டு வியாபாரிகள் கோடிக்கணக்கான பணத்துடன் சென்று ஓட்டுகளை விலைக்கு வாங்குகின்றனர். ஜனாயகத்தை பற்றி உணர வாய்ப்பில்லாத மக்கள் ஒட்டுகளை விற்றுவிடுகின்றனர். எப்படி இருப்பினும், இந்த கேடுகெட்ட பாராளு -மன்றமும், பாராளுமன்ற ஜனநாயகமும், ஒரு சிறுபான்மை பகுதியில், [அரசு அரசு ஊழியர்கள், அரசு துறை தொழிலாளர்கள், பெரும் தனியார் துறை தொழிலாளர்கள் ......] பயன்படுத்தப்பட்டுவருகின்றது . மிகக் குறைந்த சமூக உணர்வு பெற்ற, தெளிவு பெற்ற இவர்கள், ஒரு உண்மையான இனங்களின் ஜனநாயக பாராளுமன்றத்துக்கு போராடுவதன் முக்கியத்துவத்தை உணரவில்லை. இதற்காக பார்த்தால் நாடே முழுமையாக ஏலம் போய் விடும்.
கிராமங்கள் எதேச்சதிகார கும்பல்களால், சாதிமுறை உட்பட பல்வேறு முறைகளில் ஒடுக்கப்படுவதும். அன்னிய நாட்டு சுரண்டலால் விவசாயமும் முழு அழிவுக்குள்ளாவதும், தவிர்க்க முடியாததாகிவிடும். விவசாயத்தையும், தேசீயத் தொழில்களையும் அழிவில் இருந்து காப்பாற்ற முடியாது. இன்றைய ஆட்சியாளர்கள், அந்நியனுக்கு மிக மலிவான விலைக்கு, படித்தவர்களின், மக்களின் உழைப்பை வாங்குவதற்கு ஏற்ற உழைப்புச் சந்தையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். கூடவே அவன் கொடுக்கும் கூலியையும் அவனே அபகரித்து செல்லும் வகையில் அவனுடைய பொருட்களை விற்கும் சந்தையாகவும் தேசங்களை [இனங்களை] மாற்றியுள்ளனர் . இதன் விளைவு, நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் சீரழிந்து கொண்டுள்ளனர். ஆட்சியாளர்கள் வளர்ந்து வரும் நெருக்கடிகளுக்கு இன ஒடுக்குமுறையையும்; சாதி மத மோதல்களையும், அரைகுறை ஜனநாயக உரிமைகளை பறிப்பதையும், துப்பாக்கிச் சூட்டையும், தடியடியையும், சிறைக் கூடங்களையும் தீர்வாக வைக்கின்றனர்.
எனவே கீழ்கண்ட முழக்கங்களின் அடிப்படையில், இனங்களை மக்களை ஒன்று திரட்டுவோம்.
* இன விரோத, மக்கள் விரோத பாசிச பயங்கரவாத டெல்லி பாராளுமன்றத்தைக் கலைக்க போராடுவோம்!
*
ஒவ்வொரு இன மக்களும் தாங்களே ஒரு சுதந்திரமான மாநில பாராளுமன்ற தேர்தலை நடத்தி பாட்டாளி வர்க்கத் தலைமையில் ஒரு சுதந்திர புதிய ஜனநாயக அரசை அமைத்துக் கொள்ள மக்களை அணிதிரட்டுவோம்!
*
அனைத்து இனங்களுக்கும், ஏதாவது பொதுவான நிறுவனங்கள் தேவைப்பட்டால், அவற்றை மாநிலங்களவை மூலம் தேவையான காலம் நிர்வகிப்போம்!                                                           *அந்நிய நாட்டு சுரண்டல், ஆதிக்கமற்ற; சாதிகள் அற்ற, சாதிக் குடியிருப்புகள் அற்ற இனங்களை, தேசங்களை உருவாக்குவோம்!                                                                                                      * ஆதிக்கக்காரர்கள் அற்ற கிராமங்களை ,நகரங்களை உருவாக்கும் !
*
தேசங்களை [மாநிலத்தை] தொழில்மயமாக்குவோம், விவசாயத்தை பெரும் நவீன பண்ணை மற்றும் கூட்டுறவு பண்ணை மயமாக்குவோம் !
*
அனைவருக்கும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழியில் போதிப்போம். அனைவருக்கும் கல்வித் தகுதிக்கு கேற்ற வேலை வாய்ப்பை தேசங்களிலேயே [மாநிலத்தில்] உருவாக்குவதன் மூலம் கட்டாய பாடமாக உள்ள அந்நிய மொழிகளை பள்ளி கல்லூரிகளில் இருந்து அகற்றுவோம்!                                                                                                              *ஒரு மனிதத் தன்மையுள்ள, விஞ்ஞான பூர்வமான சமூகப் பண்பாட்டை, கலாச்சாரத்தை வளர்த்தெடுத்து பரப்ப, ஒரு தெளிவான, பலமான புதிய கலாச்சாரப் படையை உருவாக்குவோம்!                                                                                                                                                            * எந்தத் தலையீடும், யாருடைய தலையீடும் இல்லாத மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்வை அனைவருக்கும் உத்தரவாதப் படுத்துவதே நமது இலட்சியம்!
செவ்வணக்கம்!.. தொகுப்பு: பாவெல்
இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம், சுதந்திர வளர்ச்சிக்கான விவசாய சங்கம். தமிழ்நாடு அலைபேசி: 9677481149, 9443500595,8489943541,7639421063.


No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...