Thursday 11 October 2018

ஐந்து இயல் கோட்பாடு


  சமதர்ம குவிமைய ஐந்தியல் கோட்பாடு-ஒரு பார்வை

    அனைத்து தெற்காசிய நாடுகளின் அரசியல் கட்டுமானங்களும் தேசியத் தன்மை சிதைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இன வெறித்தன(Fanatic), சாதிய வெறித்தன, மொழி வெறித்தன, மத வெறித்தன அரசியலே இந் நாடுகளின் ஆதிக்க அரசியலாக காணப்படுகின்றன.

 அரசியலரங்க மேலாண்மை:

    பாக்கிஸ்தானில் உருது-இஸ்லாம் வெறித்தனம்(Fanatism); பங்காளதேஷில் இஸ்லாமிய வெறித்தனம்; இந்தியாவில் பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத வெறித்தனம்; இலங்கையில் சிங்கள-பௌத்த வெறித்தனம். கூடவே, தெற்காசிய நாடுகளில் சுனி-சியா வெறித்தனமும் கருக்கொண்டுள்ளது, ஆனால் இன்னமும் பிரசவமாகவில்லை. தெற்காசியா இச் சுனாமிக்குத் தப்பிக்கும் என்று கூறுவதற்கில்லை. பாக்கிஸ்தான், பங்காளதேஷ், மியன்மார் ஆகிய மத வெறித்தன அரசுகள் சிறந்த மருத்துவச்சியாகச் செயற்பட்டு வருகிறார்கள்.

 அரச நிறுவன மேலாண்மை:

    பாக்கிஸ்தான், பங்காளதேஷ், இலங்கை ஆகிய மூன்று நாடுகளினது அரசுகளும், முற்றுமுழு இன-தேசிய வெறித்தன அரசுகளாக (Ethno-Nationalist Fanatic State) உருவெடுப்பதில் அபார வெற்றி பெற்றுள்ளன. புறத்திலிருந்தோ, மேலிருந்தோ அல்லது கீழிருந்தோ மேற்கொள்ளப்படும் எவ்வகைச் சீர்திருத்தங்களாலும் இவ் இன-தேசிய வெறித்தன அரசுகளை தேசிய அரசுகளாக (Nation States) மாற்றிவிட முடியாது. அக்காலம் மலையேறிவிட்டது. இவ்வகை சீர்திருத்தங்களுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் விலுக்கு இறைத்த நீர் போலவே முடியும். இந்த உண்மையை ஒடுக்கப்பட்ட இன-தேசிய குழுமங்களின் அரசியல் தளபதிகள் (Ethno-Nationalist Groups’ Political commanders)  புரிந்து கொண்டார்களோ இல்லையோ, அனைத்து வல்லரசுகளும் புரிந்து கொண்டு விட்டன.
இதனால், இம்மூன்று அரசுகளுடனும் நட்புக் கொள்வதில், அனைத்து வல்லரசுகளும் பல்வேறு விட்டுக்கொடுப்புகளுடன், ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு முனைப்புக்காட்டி வருகின்றனர். மேற்கூறிய இன-தேசிய வெறித்தன அரசுகள், தமது நாடுகளின் இன-தேசியங்களை மட்டும் அடக்கவில்லை; தத்தமது நாட்டின் தேசப்பற்றையும் தமது காலில் போட்டு மிதித்து, ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாகத் தம்மையும், தமது நாட்டையும் ஆக்கிக் கொண்டுள்ளன. இதனால், இவ் அரசுகள் நாட்டுப் பற்றாளர்களாலும் (Patriots), இன-தேசிய குழுமங்களின் சம உரிமைக்கான போராளிகளாலும் (Ethno-National Groups), தனித் தேச உருவாக்கத்தில்(Nation state) ஈடுபட்டுள்ள போராளிகளாலும் அழிக்கப்படவேண்டிய அரசுகளாக மாறிவிட்டன. மிகப்பெரும் பிரயத்தனங்களுடன் “தேச அரசுகளாக” அடையாளப்படுத்தப்பட்டுள்ள இவ் இன-தேசிய அரசுகளை (Ethno-Nationalist State), ஜனநாயக வழிமுறைகளில் தேச அரசுகளாக (Nation State) மாற்றியமைத்தல் என்பது இனி என்றுமே சாத்தியமற்றது.

     இதனால், இவ் இன-தேசிய வெறித்தன அரசுகளின் சாம்பல் மேட்டில் புதிய தேச அரசை அல்லது தேச அரசுகளை உருவாக்குவதைத் தவிர மாற்று வழியெதுவும் இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது. ஆனால், இது சாத்தியமாக வேண்டுமானால், நாட்டுப் பற்றாளர்களினதும் (Patriotic forces), இன-தேசிய குழுமங்களின் சம உரிமைக்கான போராளிகளினதும் (Ethno-National Groups), தனித் தேச உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள போராளிகளினதும் ஒருங்கிணைவு ஒரு கட்டாய நிபந்தனையாகும்.

     இன-தேசிய குழுமங்களைக் கண்டு கொள்ளாததால் நேபாளப் புரட்சி பாரிய அரசியல் பின்னடைவைச் சந்தித்தது; தேசப் பற்றாளர்களையும், இன-தேசிய குழுமங்களின் சம உரிமைக்கான போராளிகளையும் கண்டுகொள்ளாததால் தமிழீழ விடுதலைப் போராட்டம் பாரிய இராணுவ அழிவையும் , அரசியல் பின்னடைவையும் சந்தித்தது, தமிழர்கள் பாரிய அழிவைச் சந்தித்தனர்; பெரும் ஜனநாயக எழுச்சியை நடத்திக் காட்டிய மியன்மார், அங்குள்ள இன-தேசிய குழுமங்களின் எழுச்சியைக் கண்டு கொள்ளவில்லை. அதுபோல் இவ் இன-தேசிய குழுமங்கள் தமது நாட்டில் –மியன்மார்- நடைபெற்ற ஜனநாயக எழுச்சியைக் கண்டு கொள்ளவில்லை. இதனால் இன்று இவ் இரு எழுச்சிகளும் மிகப்பெரும் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன. இந்தியாவில் காஷ்மீர், மிசோராம், மணிப்பூர், ஜார்க்கண்ட்,  திரிபுரா போன்ற இன-தேசிய குழுமங்கள் தமது சமஸ்டி எழுச்சியையும் இந்திய தேசப்பற்றையும் பொருத்திச் செல்வதில் நிதானம் காட்டிவருவதால், அவர்கள் சமீபத்தில் பாரிய பின்னடைவுகள் எதையும் சந்திக்காமல் அனைத்து வழிகளிலும் படிப்படியாக முன்னேறி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான்வாழ் இன-தேசிய குழுமங்களினது நிலையும் இதுதான். இதுவரை கூறப்பட்ட நாடுகளின் அரசுகள் அனைத்தும் இன- தேசிய வெறித்தன அரசுகளேயாகும். (Ethno-Nationalist Fanatic State). தேசிய அரசுக்குரிய தன்மை கிஞ்சித்தும் இல்லாதவை.

  இந்தியரசின் தனித்துவம்:

    ஆனால் இந்தியரசு இவற்றிலிருந்து மிகவும் வேறுபட்டுக் காணப்படுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் கட்டுமானத்தையும் தனது மேலாதிக்கத்தில் கொணர்வதில் பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத வெறித்தனம் (Brahmanetic–Hindutuva-Sanskrit Fanatism) இன்னமும் வெற்றி பெறவில்லை. வெற்றியின் இம் முதல்படிநிலையையே  அடையமுடியாமல் இருக்கும் நிலையில், பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இன-தேசிய வெறித்தன அரசு எனும் (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) நிலையை அடைய முடியாது. இவ்வித வெற்றி இந்திய மண்ணில் சாத்தியப்படாதென்றே தோன்றுகிறது.(……..எனும் கட்டுரையைப் பார்க்கவும்)
 இந்தியாவின் தனித்துவத்துக்கான காரணங்கள் :                                                    1) இந்தியாவில் துரிதமாக வளர்ந்துவரும் ஏகாதிபத்திய-நிலபிரபுத்துவ கூட்டு முதலாளித்துவம் தன்னுடன் கூடவே சாதியக் கட்டுமானத்தையும் வளர்த்து வருகிறது. இந்திய-அளவில் வளர்ந்துவரும் இச்சாதியக் கட்டுமானம் இந்தியா துண்டாடப்படுவதையும் அனுமதிக்காது, இந்திய அரசு பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இன-தேசிய வெறித்தன அரசாக (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) உருவாவதையும் அனுமதிக்காது.      
              2) இந்தியாவின் அனைத்துவகை மேட்டுக்குடியினரும்(குறிப்பாக- பார்ப்பனிய-பனியார்-மார்வாடிக் கூட்டும், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், குஜராத், பஞ்சாப், திரிபுரா, அருணாச்சல் பிரதேஷ், டெல்லி ஆகிய மாநில மேட்டுக்குடிகளும் இந்தியாவின்  “மூத்தண்ணன்” கொள்கையையே அனைவரிலும் விட அதிகமாக விரும்புகின்றனர். இந்தியாவின் வல்லரசுக்கனவின் அடித்தளம் இவர்கள்தான். இவர்களுக்கு ஒரு பலமான மத்திய-அரசு வேண்டும். பார்ப்பனர்களும், பார்ப்பனர் அல்லாதோரும் இதில் ஒன்றுப்பட்டே உள்ளனர். ஆனால் அவ்வித அரசு பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இன-தேசிய வெறித்தன அரசாக (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) இருக்கவேண்டும் என்பது பார்ப்பனிய-பனியா கூட்டின் விருப்பம், அவ்விதம் இருக்கக் கூடாது என்பது பார்ப்பனியர்கள் அல்லாத சாதி-இந்துக்களின் விருப்பம். 
  இந்திய மேட்டுக்குடியின் முன்பின் முரண் நிலைப்பாடு.                                             3)  மார்க்ஸியம், எவ்விதம் உலகத் தொழிலாளர்களினதும், முரணற்ற மனித நேயர்களினதும், வழிகாட்டும் தத்துவமாகத் திகழ்கிறதோ அது போல், பார்ப்பனியம்தான் இந்திய மேட்டுக்குடிகளின் வழிகாட்டும் தத்துவமாகும். இம்மேட்டுக் குடிகளின் பார்ப்பனர் அல்லாதோர் பிரிவு, பார்ப்பனியர்களின் பதவி மேலாண்மைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள், ஆனால் பார்ப்பனியத்துக்கு எதிராக போராடுவதில்லை, என்றுமே போராடியதுமில்லை. பார்பனியர்களால் தோற்றுவிக்கப்பட்ட பார்ப்பனியத்தைத் தமதாக்கிக் கொள்ளவே முயன்றுவருகிறார்கள்.
  பார்ப்பனர்கள் மாத்திரந்தான் பார்ப்பனிஸ்டுகள் என்பதில்லை. இந்தியாவின் மேட்டுக்குடிகள் அனைவருமே (பட்டியலின மேட்டுக்குடிகள் உட்பட) பார்ப்பனர்கள் அல்லாத பார்ப்பனிஸ்டுகளாக பரிணாமம் பெற்று வருகிறார்கள். பார்பனியத்தை ஒரு தத்துவமாக, ஒரு கருத்தோட்டமாக ஏற்றுக்கொண்ட சாதிய, வர்க்க மேட்டுக்குடிகள் அனைவரும் பார்ப்பனிஸ்டுகளே. “திடகாத்திரமான” ஜாதிய இந்துக்களாக விளங்குவதற்கு இந்த மாற்றம் அவசியமாகின்றது. 
  ஆனால், இந்த ஜாதி இந்துக்கள், பார்பனியத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயராயில்லை. பார்பனியத்தை சம்ஸ்கிருத நீக்கம் செய்ய முற்படுகிறார்கள். இது சாத்தியமற்றது. ஏனெனில் பார்பனியத்தின் தாய்மொழி சம்ஸ்கிருதமே. இங்குதான் மொழி முக்கியத்துவம் பெறுகிறது. பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இன-தேசிய வெறித்தன அரசின் உருவாக்கத்திற்கு மொழி பெரும் தடையாக அமைகிறது. (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) மேட்டுக் குடிகள் மொழி விடயத்தில் ஒத்த கருத்துக்கு வரமுடியாமை, இன-தேசிய வெறித்தன அரச உருவாக்கத்திற்கு பெரும் தடையாக உள்ளது.
      இந்திய பார்பனரல்லா மேட்டுக்குடியின் முன் பின் முரணான கொள்கைதான் மத்திய மாநில அரசுக்களுக்கிடையேயான உறவுகளை சீர்செய்ய முடியாமல்  காலத்துக்குக் காலம் தெருச்சண்டைகளில்  ஈடுபட்டுவருவதற்கான காரணமாகும்.
            4)  பார்ப்பனிய-இந்து-சம்ஸ்கிருத இன-தேசிய வெறித்தன அரசாக (Brahmanetic–Hindutuva-Sanskrit Ethno-Nationalist Fanatic State) மாறுவதற்கு தடையாக இருக்கும் மற்றோர் காரணி இந்தியாவின் மாநில சுயாட்சி முறையாகும்.  
   இதுவரை கூறிய காரணங்களால் தெற்காசியப் பிராந்தியம் பின்வரும் போராட்டங்களின் கொதிகலனாக மாறிவரும் நிலை தொடர்ந்து வளர்ந்து சென்ற வண்ணமேயுள்ளது.
Ø      நாடுகள் தமது சுதந்திரத்துக்காக நடத்தும் போராட்டங்கள்……நாட்டுப்பற்றியல்(Patriotism)
Ø         இன-தேசிய குழுமங்களின் சம உரிமைக்கான போராட்டங்களும்-சமஸ்டிஇயல் (Fedaralism),    தனித் தேச உருவாக்கத்திற்கான போராட்டங்களும்………தேசப்பற்றியல் (Nationalism)
Ø  மதசார்பின்மைக்கான போராட்டங்கள்……மதசார்பின்மையியல் (Secularism)
Ø  சாதிய ஒடுக்குமுறைகளுக்கும், பாரபட்சங்களுக்கும் எதிரான போராட்டம்……சாதிமறுப்பியல்(Anti-Casteism)
Ø                   ஆண் பேரகங்கார ஒழிப்புப் போராட்டம். ……பாலின சமத்துவ இயல் Gender Equalitarianism
Ø          சுரண்டும் வர்க்கங்களின் சுரண்டலுக்கும் சூறையாடல்களுக்கும் எதிராக உழைக்கும் மக்கள் நடத்தும் வர்க்கப் போராட்டங்கள்……. வர்க்கவியல் அல்லது சமதர்மவியல்( Classism/Socialism)
    ஆக எமது பிராந்தியத்தில் அறுவகைப் போராட்டங்களும், இவ் அறுவகை போராட்டங்கள் தொடர்பான அறுவகை இயல்களும் உள்ளன. இப் போராட்டங்களினதும், இவ் இயல்களினதும் இருத்தலும் அவற்றிற்கிடையேயான வேறுபாடுகளும் இயல்பானவையும் தவிர்க்க முடியாதனவையுமாகும். இவ் வேறுபாடுகள் பகைமையானதாக மாறாது, ஏனெனில், இவை அனைத்துக்கும் அடிப்படையாகத் திகழ்வது வர்க்க ஒடுக்குமுறையேயாகும். இன்னோர் வார்த்தையில் கூறினால் இவை அனைத்தும் வர்க்க ஒடுக்குமுறையை முறைப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தனித்தனி அடக்குமுறைகளாகும். ஆகவே இவ் அறுவகை அடக்குமுறைகளுக்கெதிரான அறுவகைப் போராட்டங்களும், அறுவகை இயல்களும் ஒன்றையொன்று தழுவிச் செல்லவேண்டியது கட்டாயமானதாகின்றது. தழுவிச் சென்றால் மட்டும் போதாது இவ் ஆறு இயல்களிலும் ஓரியல் அனைத்து இயல்களினது குவிமையமாக விளங்குகின்றது. அக் குவிமைய இயல் எது என்பதே கேள்வி. மூன்று சாத்தியப்பாடுகள் உண்டு.
 1) சமதர்ம குவிமையம் 2) நாட்டுப்பற்றியல் குவிமையம் 3) தேசப்பற்றியல் அல்லது சமஸ்டியியல் குவிமையம்.
   முன்சொன்ன அறுவகைப் போராட்டங்களும் முன்பின் முரணற்ற முறையில் முன்செல்ல வேண்டுமானால், சமதர்மமே குவிமைய இயலாக அமையவேண்டும். ஏனெனில். இவ் ஐவகை அடக்குமுறைகளும் வர்க்க ஒடுக்குமுறையை முறைப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தனித்தனி அடக்குமுறைகளாக இருப்பதே இதற்கான காரணமாகும். இதுதான் சமதர்ம மைய ஐந்தியல் கோட்பாடென முன்வைக்கப்படுகின்றது.
   அனைத்துவகைப் போராளிகளும் சமதர்மந்தான் தமது குறிக்கோள் என்றே கூறிக்கொள்கிறார்கள். சொல்லளவில் சமதர்மத்தை நிராகரிப்பார் யாருமிலர். இது அவர்களின் மனதின் மொழியாக இருந்தால், இக்கோட்பாட்டை அவர்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். அதேபோல் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடுவதுதான் தமது குறிக்கோள் என்று அனைத்துவகை இடதுசாரிகளும் கூறிக்கொள்கிறார்கள். முழுமையான விடுதலையை நிராகரிக்கும் இடதுசாரியென யாருமிலர். இது அவர்களின் மனதில் இருந்துவரும் கூற்றாக இருந்தால், அவர்களுக்கேஉரிய இக்கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் அவர்கள் முன்முயற்சியாளர்களாகவும், எடுத்துக்காட்டாளர்களாகவும் திகழ வேண்டும்.
       அறுவகைப் போராளிகளும் “சமதர்ம மைய ஐந்தியல் கோட்பாட்டை” முறையாகப் பின்பற்றினால்தான், தெற்காசியா எங்கணும் கோரத்தாண்டவம் ஆடித்திரியும் பண்பாட்டுத் தேசியவாதம் எனும் இன-தேசிய வெறியாட்டத்தை Ethno-Nationalist Fanatism வெற்றிகொள்ளமுடியும். அணு ஆயுத பயன் பாட்டில் இருந்து எமது பிராந்தியத்தை மீட்கமுடியும்.


No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...